மக்களோடு மக்களாக... எதற்கும் அஞ்சாத... இளம் பெண் எம்.எல்.ஏ. விடதலா ரஜினியின் துணிச்சல்
குண்டூர்: ஆந்திராவில் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியை சேர்ந்த இளம் பெண் எம்.எல்.ஏவான விடதலா ரஜினியின் களப்பணியும், சுறுசுறுப்பும் அவரது தொகுதியான சிலகலூரிபேட் மக்கள் மத்தியில் செல்வாக்கை உயர்த்தியுள்ளது.
30 வயதே ஆன இந்த எம்.எல்.ஏ.வின் அதிரடி ஆக்ஷன்களால் சிலகலூரிபேட் தொகுதிக்குட்பட்ட அரசு அலுவலகங்களில் மக்கள் அளிக்கும் புகார் மனுக்கள் மீது உடனுக்கு உடன் நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன.
ஏற்கனவே ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் தலைவரும், ஆந்திர முதல்வருமான ஜெகன் மோகன் ரெட்டி பல்வேறு புதுமைகளை நிகழ்த்தி வரும் நிலையில், அவரது கட்சியை சேர்ந்த எம்.எல்.ஏ. ஒருவரும் களப்பணியில் சுற்றி சுழன்று வருகிறார்.
வழக்கை மாற்றிய வாதம்.. விடாமல் நடந்த சட்ட போராட்டம்.. டாஸ்மாக் வழக்கில் அதிரடி காட்டிய தமிழக அரசு!
30 வயது
ஆந்திர மாநிலம் குண்டூர் மாவட்டம் சிலகலூரிபேட் தொகுதி எம்.எல்.ஏ.வாக இருப்பவர் விடதலா ரஜினி. இவர் கடந்த 2019-ல் நடந்த சட்டமன்றத் தேர்தலில் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு எம்.எல்.ஏ.வாக உள்ளார். 30 வயதே ஆன இவர் தேர்தலில் போட்டியிடுவதற்கு முன்பு ஐடி துறையில் மென் பொருள் பொறியாளராக பணியாற்றியவர். நடுத்தர குடும்பத்தை சேர்ந்த இவருக்கு ஜெகன் மோகன் ரெட்டி முதல் முறையாக தேர்தலில் போட்டியிடும் வாய்ப்பை வழங்கினார்.
தலைவன் வழி
சிலகலூரிபேட் தொகுதியில் தன்னை எதிர்த்து போட்டியிட்ட தெலுங்கு தேச கட்சி வேட்பாளரை விட 50% வாக்குகள் கூடுதலாக பெற்று பிரம்மாண்ட வெற்றி பெற்றார் விடதலா ரஜினி. அப்போது தேர்தலில் அவர் போட்டியிட்ட போது 29 வயது. ஒரு 29 வயது பெண் இப்படி ஒரு வெற்றி பெறுவார் என தெலுங்கு தேசம் கட்சி சற்றும் எதிர்பார்க்கவில்லை. இதையடுத்து ஜெகன் மோகன் ரெட்டி வழியில் தனது தொகுதியில் பல்வேறு புதுமைகளை கொண்டு வந்தார் விடதலா ரஜினி.
நேரடி விசிட்
தனது தொகுதி மக்கள் அளிக்கும் புகார் மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்காத அதிகாரிகளை கேள்விக்கணைகளால் துளைத்தெடுத்தார். இதையடுத்து ஒரு சின்னப் பெண் நம்மை என்ன செய்துவிடும் என்ற இறுமாப்பில் இருந்த அரசு அலுவலர்கள் அலறத் தொடங்கினர். விடதலா ரஜினி ஆய்வுக்கு வருகிறார் என்றாலே அது தொடர்பான அனைத்து கோப்புகளையும் தயார் செய்து அவரது மேசையில் வைக்கத் தொடங்கினர் அரசு அதிகாரிகள்.
காவலர் சஸ்பெண்ட்
விடதலா ரஜினி ஊரில் இருந்தால் சிலகலூரிபேட் தொகுதி எம்.எல்.ஏ.அலுவலகத்திற்கு தவறாமல் வந்துவிடுவார். அங்கு அவரை சந்திக்க வரும் மக்களிடம் கனிவுடன் பேசி அவர்களது கோரிக்கை மனுக்களை பெற்று அதற்கு தீர்வு பெறுவதற்கான நடவடிக்கைகளை தனது அலுவலக ஊழியர்கள் மூலம் மேற்கொள்கிறார். யாரும் எளிதாக அணுகலாம் என்பதால் இவருக்கு ஒரு ரசிகர் பட்டாளமே சிலகலூரிபேட் தொகுதியில் உள்ளது.
அதிரடி
இதனிடையே இவரது துணிச்சலுக்கும், அதிரடிக்கும் ஒரு உதாரணம் கூறவேண்டும் என்றால், ஊரடங்கின் போது சட்டவிரோதமாக மது விற்பனை செய்ய அனுமதித்த தலைமைக்காவலர் ஒருவரை காவல் நிலையத்திற்கே சென்று வறுத்தெடுத்ததுடன் அவரை சஸ்பெண்ட் செய்யவும் நடவடிக்கை எடுத்தார். இதேபோல் சட்டமன்றத்திலும் தனது தொகுதி மக்களுக்கு தேவையான திட்டங்களை ஆணித்தரமாக பேசி அதனை அரசின் கவனத்திற்கு கொண்டு செல்கிறார்..