கடனை வாங்கலாம், கட்ட முடியாட்டி வீட்டுப் பெண்களின் கற்பு அதோ கதி.. ஆந்திராவில் "ஷாக்" சம்பவம்
ஹைதராபாத்: ஆந்திராவை ஒரு பரபரப்புச் சம்பவம் உலுக்கி எடுத்து வருகிறது. கந்து வட்டிக்குப் பணம் கொடுத்து அதைக் கட்ட முடியாதவர்களின் வீட்டுப் பெண்களை பாலியல் ரீதியாக சீரழித்து வரும் ஒரு கும்பலை போலீஸார் கைது செய்துள்ளனர். இந்த பயங்கரச் செயல் தொடர்பாக இதுவரை 80 பேர் கைதாகியுள்ளனர்.
"கால் மனி" மோசடி என்று கூறப்படும் இந்த அக்கிரமச் செயலால் ஆந்திராவின் பல மாவட்டங்களில் பல குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாம். பெரிய பெரிய தாதா கும்பல்கள், அரசியல்வாதிகள், கந்து வட்டிக்குப் பணம் கொடுப்போர் என பல தரப்பினரும் இதில் தொடர்பு கொண்டுள்ளதாக காவல்துறை கூறுகிறது.
இந்த விவகாரத்தில் ஆந்திர மாநில அரசு மெத்தனமாக இருப்பதாக ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது. முதல்வர் சந்திரபாபு நாயுடுவைக் கண்டித்து அக்கட்சியினர் போராட்டத்திலும் ஈடுபட்டுள்ளனர்.
"கால் மனி"
இந்த கால்மனி மோசடியானது அராஜகமாக உள்ளது. அதாவது நமக்குத் தேவைப்படும் பணத்தை சம்பந்தப்பட்ட நபர்களிடம் போன் செய்து கேட்டால் போதும். எவ்வளவு பணம் கேட்டாலும் உடனே நம்மைத் தேடி வந்து தருவார்கள்.
திரும்பக் கேட்டதும் தர வேண்டும்
அங்குதான் நாம் வலையில் சிக்கிக் கொள்வோம். அந்தப் பணத்தை எப்போது அவர்கள் திரும்பக் கேட்டாலும் உடனே நாம் தந்து விட வேண்டும். அப்படித் தர முடியாமல் போனால் நம்முடைய அசையும் மற்றும் அசையா சொத்துக்களை அந்தக் கும்பல் பறிமுதல் செய்து விடும்.
பெண்களுக்குத்தான் பேராபத்து
இதில் என்ன கொடூரமான விஷயம் என்றால், வீட்டுப் பெண்களை இக்கும்பல் கடத்திச் சென்று விடுமாம். அவர்களின் கற்புக்கு உத்தரவாதம் இல்லை. இதுதான் பல குடும்பங்களை நிலை குலைய வைத்து பரிதாபமான நிலைக்குத் தள்ளியுள்ளது.
200 சதவீத வட்டி
இந்தக் கும்பல் மிக மிக அதிகமான வட்டியை வசூலிக்கிறது. அதாவது 120 முதல் 200 சதவீதம் என்ற அளவுக்கு வட்டியைத் தீட்டி விடுகிறார்கள். கடன் வாங்குவோரிடமிருந்து வெற்று காசோலையில் கையெழுத்துப் பெற்றுக் கொள்கிறார்கள். பிராமிசரி நோட்டும் வாங்கிக் கொள்கிறார்கள்.
விஜயவாடாவில் முதல் புகார்
இந்த அக்கிரமக் கும்பலால் பாதிக்கப்பட்ட விஜயவாடாவைச் சேர்ந்த ஒரு பெண் சமீபத்தில் போலீஸுக்குப் போனபோதுதான் இந்த அராஜகச் செயல் வெளிச்சத்திற்கு வந்தது.
ஒன்றரை லட்சத்திற்காக சிக்கியவர்
இப்பெண் ரூ. 1.5 லட்சம் பணத்தை இந்தக் கும்பலைச் சேர்ந்தவர்களிடம் கடன் வாங்கியிருந்தார். ஆனால் அக்கும்பல் அராஜக வட்டி போட்டு ரூ. 6 லட்சம் கேட்டுள்ளது. ஆனால் அவரால் கொடுக்க முடியவில்லை. இதையடுத்து அக்கும்பல் வழக்கம் போல பல்வேறு அராஜகத்தில் இறங்கியுள்ளது. இதையடுத்து அவர் போலீஸில் புகார் கொடுத்தார்.
அமைச்சர்கள், எம்.பிக்கள், எம்.எல்.ஏக்களுக்கும் தொடர்பு
இந்த பயங்கர அட்டகாசம் குறித்து ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜெகன்மோகன் ரெட்டி கூறுகையில், தெலுங்குதேசத்தைச் சேர்ந்த பல அமைச்சர்கள், எம்.பிக்கள், எம்.எல்ஏக்கள். கட்சித் தலைவர்களும் இதில் தொடர்புடையதாக கூறப்படுகிறது. ஆனால் முதல்வர் சந்திரபாபு நாயுடு இதில் மெத்தனமாக இருக்கிறார்.
ஆந்திராவுக்கே அவமானம்
இந்த கேடு கெட்ட கடன்தருவோரால் ஆந்திராவுக்கே அவமானம் வந்து சேர்ந்துள்ளது. இதில் தொடர்புடைய முக்கியப் புள்ளிகள் குறித்து நடவடிக்கை எடுக்காமல் அவர்களைக் காப்பாற்றுகிறது மாநில அரசு என்று காட்டமாக கூறினார். இந்த விவகாரம் தொடர்பாக ஆளுநரிடமும் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி புகார் கொடுத்துள்ளது.
டிஜிபி சொல்வது என்ன?
இந்த விவகாரம் குறித்து ஆந்திர மாநில டிஜிபி ஜே.வி.ராமுடு கூறுகையில், இதில் தொடர்புடைய யாரையும் தப்பிக்க விட மாட்டோம். பாரபட்சம் பார்க்காமல் நடவடிக்கை எடுப்போம். இதுவரை 80 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அரசியல் பாகுபாடு இல்லாமல் பலரும் இதில் அடக்கம் என்றார்.