லோக்சபாவில் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவரும் ஆந்திரக்கட்சிகள்... என்ன செய்யப்போகிறது அதிமுக?
டெல்லி: பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசுக்கு எதிராக ஆந்திராவைச் சேர்ந்த தெலுங்கு தேசம், ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் ஆகிய கட்சிகள் லோக்சபாவில் இன்று நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டுவருகின்றன. இந்த தீர்மானத்தை விவாதத்திற்கு ஏற்பதா என்பதை சபாநாயகர் இன்று முடிவு செய்வார் என்பதால் தேசிய அரசியலில் பரபரப்பு நிலவுகிறது.
ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து வழங்காததை கண்டித்து மத்தியில் ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து ஆந்திராவில் முதலமைச்சராக இருக்கும் சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சி திடீரென வெளியேறியது. மத்திய அரசுக்கு எதிராக ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியும் ஏற்கனவே இந்த விவகாரத்தில் நம்பிக்கையில்லா தீர்மானம் அளித்துள்ளன.
லோக்சபாவில், நம்பிக்கையில்லா தீர்மானம் நிறைவேற குறைந்தபட்சம் 50 உறுப்பினர்களின் ஆதரவு தேவைப்படுகிறது. தெலுங்குதேசம் கட்சிக்கு 15 எம்.பிக்களும், ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியில் 8 எம்.பிக்களும் உள்ளதால், தீர்மானம் கொண்டுவர அனைத்துக்கட்சிகளின் உதவியை இந்தக்கட்சிகள் கோரியுள்ளன. அண்டைமாநிலமான தமிழகம், தெலுங்கானா அரசியல்தலைவர்களிடம் பேசியபோதும், தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி, அதிமுக இரண்டு கட்சிகள் என இரண்டு கட்சிகளும் தீர்மானத்தை ஆதரிக்கவில்லை என்று சொல்லப்படுகிறது.
அதிமுகவின் நிலைப்பாடு என்ன?
ஆந்திராவில் உள்ள அரசியல்கட்சிகள் தமிழக பிரச்னைகளுக்கு இதற்கு முன்பு எந்த ஆதரவோ, குரலோ கொடுத்ததில்லை. அப்படியிருக்கும்போது, மத்திய அரசை பகைத்துக்கொள்ளும் நிலையில் இல்லாத தமிழக அரசு நிச்சயம் நம்பிக்கையில்லா தீர்மானத்தை ஆதரிக்காது என்று மூத்த அரசியல் பார்வையாளர்கள் தெரிவிக்கின்றனர். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரி அதிமுக எம்.பிக்கள் நாடாளுமன்ற வளாகத்தில் தொடர் போராட்டம் நடத்தி வந்தாலும், அரசுக்கு எதிரான நிலைப்பாட்டை இன்னும் வெளிப்படையாக அறிவிக்கவில்லை.
ஒய்எஸ்ஆர் காங்.கிற்கு யார்யார் ஆதரவு?
காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ், சிவசேனா ஆகிய கட்சிகள் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவர உதவும் என்று சொல்லப்படுகிறது. ஜெகன் மோகன் ரெட்டியின் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி கொண்டு வரும் நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ், இடதுசாரி கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளன.
ஏற்கப்படுமா தீர்மானம்?
லோக்சபாவில் ஏற்கனவே நம்பிக்கையில்லா தீர்மானம் தாக்கல் செய்யப்பட்டு அது விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்படாத சூழலில் இனி 6 மாதத்துக்குப் பிறகு தான் அடுத்த தீர்மானத்தை கொண்டு வர முடியும் என்ற கருத்தும் நிலவுகிறது. இதனால் தீர்மானத்திற்கு அனுமதி வழங்கப்படுமா இல்லையா என்பது சபாநாயகர் சுமித்ராமகாஜன் கையில் தான் இருக்கிறது.
பாஜகவின் பலம் எப்படி உள்ளது?
லோக்சபா சுமூகமாக நடைபெற்றால், இந்த நம்பிக்கையில்லா தீர்மானம் மீதான விவாதம் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. மொத்தம் 543 உறுப்பினர்களைக் கொண்ட மக்களவையில் தற்போது 536 உறுப்பினர்கள் மட்டுமே உள்ளனர். இதில் 274 உறுப்பினர்களைக் கொண்ட பாஜகவுக்கு, கூட்டணி கட்சிகளின் ஆதரவும் உள்ளதால் பெரும்பான்மையை நிரூபிப்பதில் சிக்கல் இல்லை என்று தெரிகிறது.
கூட்டணகளின் உதவியும் தேவை
இருப்பினும் மத்திய அரசின் முழு பலத்தையும் காட்ட கூட்டணிக் கட்சிகளின் ஆதரவை பாஜக பெற வேண்டியிருக்கும். ஆனால் சிவசேனா, ராம்விலாஸ் பஸ்வானின் லோக் ஜனசக்தி உள்ளிட்ட சில பாஜகவின் கூட்டணி கட்சிகள் அதிருப்தியில் உள்ளன. இதனால் இந்த நம்பிக்கையில்லா தீர்மானத்தின் பலன் எதிர்க்கட்சிகளுக்கு மட்டுமின்றி, பாஜக மீது அதிருப்தியில் உள்ள அதன் கூட்டணி கட்சிகளுக்கும் கிடைக்குமென எதிர்பார்க்கப்படுகிறது.