தெலுங்கானா எதிர்ப்பு: நிதீஷ்குமார் - பிரகாஷ்சிங் பாதலுடன் ஜெகன் சந்திப்பு
பாட்னா: ஒருங்கிணைந்த ஆந்திராவை வலியுறுத்தி நடைபெறும் போராட்டத்திற்கு ஆதரவு தரக்கோரி ஒய்.எஸ்.ஆர்., காங்கிரஸ் தலைவர் ஜெகன் மோகன் ரெட்டி, பீகார் முதல்வர் நிதிஷ்குமார், பஞ்சாப் முதல்வர் பிரகாஷ் சிங் பாதல் ஆகியோரை சந்தித்துப் பேசினார்.
ஆந்திராவை பிரித்து தெலுங்கானா மாநிலம் அமைக்க ஜெகன்மோகன் ரெட்டியின் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. ஆந்திர மக்களின் கருத்தை கேட்காமல் மாநிலத்தை பிரிக்க நினைக்கும் மத்திய அரசின் செயல்பாடுகளை கண்டித்தும் ஜெகன் மோகன் ரெட்டி போராட்டம் நடத்தி வருகிறார்.
நாடாளுமன்றத்தில் தெலுங்கானா மசோதா தாக்கல் செய்யப்படும்போது அதற்கு எதிராக வாக்களிக்கும் படி ஒவ்வொரு மாநில முதல்அமைச்சர்கள் மற்றும் அரசியல் கட்சி தலைவர்களை சந்தித்து ஜெகன்மோகன் ரெட்டி ஆதரவு திரட்டி வருகிறார்.
சனிக்கிழமையன்று பீகார் மாநிலம் பாட்னா சென்ற ஜெகன் மோகன் ரெட்டியை அரசு விருந்தினர் போல நிதீஷ்குமார் வரவேற்றார். விமான நிலையத்தில் மந்திரிகள் குழுவை அனுப்பி அரசு மரியாதையுடன் அவரை அழைத்து வந்தார். மேலும் பீகாரில் உள்ள தெலுங்கு மக்கள் சார்பிலும் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
ஒருமணி நேரம் நிதிஷ்குமாரிடம் பேசிய ஜெகன், தெலுங்கானா மசோதாவுக்கு எதிராக வாக்களிக்கும் படி நிதிஷ்குமாரைக் கேட்டுக் கொண்டார். மாநில பிரிவினை விஷயத்தில் காங்கிரஸ் கட்சி முறையாக செயல்படவில்லை என்றும் தனது விருப்பத்தை மக்கள் மீது திணிக்கிறது என்றும் ஜெகன் மோகன் ரெட்டி எடுத்துக் கூறினார்.
ஜெகன் மோகன் ரெட்டி கருத்தை ஏற்றுக் கொண்ட நிதிஷ்குமார் ஜெகனின் முயற்சியை பாராட்டினார். செய்தியாளர்களிடம் பேசிய நிதிஷ்குமார், வயதில் சிறியவராக இருந்தாலும் அவரது எண்ணமும், அணுகுமுறையும் சிறப்பாக உள்ளது'' என்று கூறினார் ஜெகன் மோகனுக்கு தனது முழு ஆதரவை தெரிவிப்பதாக கூறினார். 3-வது அணி பற்றி எதுவும் பேச்சுவார்த்தை நடைபெற்றதா? என்று நிதீஷ்குமாரிடம் செய்தியாளர்கள் கேட்டதற்கு, அதுபற்றி பேச இது தருணம் அல்ல'' என்று பதில் அளித்தார்.
நிதீஷ்குமாரை சந்தித்த பிறகு ஜெகன் மோகன் ரெட்டி பஞ்சாப் சென்றார். அங்கு முதல்வர் பிரகாஷ்சிங் பாதலை சந்தித்து பேசினார். அவரிடமும் தெலுங்கானா மசோதாவை எதிர்க்க ஆதரவு திரட்டினார். ஜெகன் மோகன் ரெட்டியின் வாதம் ஏற்றுக் கொள்ளக் கூடியதாக உள்ளது. அவருக்கு எனது முழு ஆதரவு உண்டு'' என்று பிரகாஷ் சிங்பாதல் கூறினார்.
தெலுங்கானாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து வரும் ஜெகன் மோகன் ரெட்டி கடந்த சில மாதங்களுக்கு முன்பு மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜியை சந்தித்து ஆதரவு திரட்டினார். தமிழக முதல்வர் ஜெயலலிதாவை சில தினங்களுக்கு முன்பு சந்தித்துப் பேசினார் என்பது குறிப்பிடத்தக்கது.