அட்ரா நம்ம கட்சி கலரை.. அடங்காத ஜெகன் மோகன் ரெட்டி.. குவியும் கண்டனங்கள்!
Recommended Video
அமராவதி: ஆந்திராவில் அரசு கட்டிடங்களுக்கு ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் கட்சியின் கொடி வண்ணம் பூச அரசாணை பிறப்பித்திருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியாவில் உள்ள அரசியல் கட்சித் தலைவர்களில் பலர் தாங்கள் ஆட்சி அதிகாரத்தில் உள்ளபோது அரசு நிதியை கொண்டு கட்சியை வளர்ப்பதில் கில்லாடிகளாக இருந்துள்ளனர்.
உத்தரப்பிரதேசத்தில் மாயாவதி முதல்வராக இருந்தபோது தனது கட்சி சின்னமான யானையின் சிலையை ஊரெங்கும், தெருவெங்கும் நிறுவினார். பின்னர் அதற்காக உச்சநீதிமன்றத்தில் அவர் குட்டு வாங்கியதெல்லாம் தனிக்கதை.
தமிழகத்திலும் இது போன்ற செயல்களுக்கு விதி விலக்கு இல்லை. ஜெயலலிதா முதல்வராக இருந்த போது எம்.ஜி.ஆர். நினைவிடத்தின் முகப்பில் அரசு நிதியில் இரட்டை இலை சின்னத்தை பிரமாண்டமாக வடிவமைத்து நிறுவினார். அதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து திமுக உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தது.
தேசிய குடிமக்கள் பதிவேட்டில் விடுபட்ட 19 லட்சம் பேர்.. கைது செய்யப்படமாட்டார்கள்.. வெளியுறவுத் துறை
அந்த வழக்கு விசாரணையில் அரசு தரப்பில் அளிக்கப்பட்ட பதில் அனைவரையும் புருவம் உயர்த்தச் செய்தது. ஆம், எம்.ஜி.ஆர். நினைவிடத்தில் அமைக்கப்பட்டிருப்பது இரட்டை இலை சின்னமே அல்ல என்றும், பறக்கும் குதிரையின் இறகுகள் எனவும் விநோத பதில் தரப்பட்டு சமாளிக்கப்பட்டது.
இந்த வரிசையில் ஆந்திர முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டியும் இப்போது இணைந்து விடுவார் போல் தெரிகிறது. ஆந்திரா முழுவதும் கிராமச் செயலகங்கள் அக்.2 முதல் தொடங்கப்படுகின்றன. அதற்காக கட்டப்பட்டுள்ள கட்டிடங்களில் ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் கட்சியின் கொடி வண்ணம் பூச ஊரக வளர்ச்சித்துறை ஆணையர் கிரிஜா சங்ககர் அறிவுறுத்தியுள்ளார். இது தொடர்பான மாதிரி படத்தையும் வெளியிட்டதால் ஜெகன் மோகன் ரெட்டிக்கு எதிராக பாஜக, தெலுங்கு தேசம் கட்சியினர் வாளை சுழற்றத் தொடங்கியுள்ளனர்.
இதனிடையே செய்தியாளர்களிடம் பேசிய ஆந்திர மாநில பாஜக செய்தித் தொடர்பாளர் லால் தினகரன், மக்கள் வரிப்பணத்தை ஜெகன் தவறாக பயன்படுத்துவதாகவும், கண்டனத்திற்குரிய செயல் எனவும் கடுகடுத்துள்ளார். நாயுடுவும் இதை வைத்து போராட்டம் நடத்தும் திட்டத்தில் உள்ளார்.