சிறப்பு அந்தஸ்து வழங்க மத்திய அரசு மறுப்பு: நாளை மறுநாள் ஆந்திரா 'பந்த்'- ஜெகன் அறிவிப்பு
ஹைதராபாத்: ஆந்திரா மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்க மத்திய அரசு மறுத்துவிட்டதைக் கண்டித்து நாளை மறுநாள் முழு அடைப்புப் போராட்டம் நடத்தப்படும் என்று ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சித் தலைவர் ஜெகன் மோகன் ரெட்டி அறிவித்துள்ளார்.
ஒருங்கிணைந்த ஆந்திரா பிரிக்கப்பட்டு தெலுங்கானா தனி மாநிலம் உருவாக்கப்பட்டது. அப்போது மத்திய அரசு, ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கப்படும் என உறுதி அளித்திருந்தது.
ஆந்திராவில் ஆட்சியில் அமர்ந்த தெலுங்குதேசம் கட்சியும் சிறப்பு அந்தஸ்து பெற்றுத் தருவதாக உறுதியளித்திருந்தது. தெலுங்குதேசத்தின் கூட்டணி கட்சியான பாஜகவும் ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து பெற்றுத் தரப்படும் என கூறி வந்தது.
சிறப்பு அந்தஸ்து மறுப்பு
இந்த நிலையில் திடீரென ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து தர முடியாது; அதே நேரத்தில் கூடுதல் நிதி ஒதுக்க முடியும் என்று மத்திய அமைச்சர் அருண்ஜேட்லி அறிவித்தார். அவரது இந்த அறிவிப்பு ஆந்திராவில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
ஏமாற்றிய சந்திரபாபு
இது குறித்து ஆந்திரா எதிர்க்கட்சித் தலைவரும் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் தலைவருமாக ஜெகன் மோகன் ரெட்டி கூறியதாவது
சிறப்பு அந்தஸ்து பெற்றுத் தருவேன் என்று கூறினார் முதல்வர் சந்திரபாபு நாயுடு. ஆனால் இப்போது மத்திய அரசு கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்துள்ளதற்கு மகிழ்ச்சியைத் தெரிவிக்கிறார்.
நாடகம்
ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து கிடைக்கும் வரை நாங்கள் ஓயப்போவதில்லை. மத்திய அமைச்சர் அருண்ஜேட்லியும் சந்திரபாபு நாயுடுவும் இந்த விவகாரத்தில் நாடகமாடி வருகிறார்கள்.
பந்த்
சிறப்பு அந்தஸ்தை பெற்றுத் தர முடியாத முதல்வர் சந்திரபாபு நாயுடு ராஜினாமா செய்ய வேண்டும். ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து தர மறுப்பதைக் கண்டித்து வரும் சனிக்கிழமையன்று முழு அடைப்புப் போராட்டம் நடத்தப்படும். இந்த போராட்டத்துக்கு அனைவரும் ஒத்துழைப்பு தர வேண்டும்
இவ்வாறு ஜெகன் மோகன் ரெட்டி கூறினார்.