சஸ்பெண்டு வழக்கு: அப்பீல் மனு தள்ளுபடி... சட்டசபை பட்ஜெட் கூட்டத்தில் ரோஜா பங்கேற்க இயலாது!
நகரி: ஆந்திர சட்டசபையில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டதை எதிர்த்து, நடிகை ரோஜா தொடர்ந்த அப்பீல் மனுவை ஹைதராபாத் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. இதனால், நாளை தொடங்கும் அம்மாநில சட்டசபை பட்ஜெ கூட்டத்தொடரில் அவர் பங்கேற்க இயலாத நிலை ஏற்பட்டுள்ளது.
ஆந்திராவில் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியின் நகரி தொகுதி எம்.எல்.ஏ.வாக பதவி வகித்து வருகிறார் நடிகை ரோஜா. இவர், கடந்தாண்டு டிசம்பர் மாதம் அம்மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடுவை தரக்குறைவாக பேசியதற்காக சட்டசபையில் இருந்து ஒரு ஆண்டுக்கு சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.
ஆனால், இதனை எதிர்த்து ஹைதராபாத் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார் ரோஜா. இந்த வழக்கு விசாரணை நீதிபதி சஞ்சய்குமார் முன்னிலையில் நடந்து வருகிறது. இந்த விவகாரம் தொடர்பாக பதில் அளிக்க ஆந்திர சட்டசபை விவகாரத்துறை முதன்மை செயலாளர் மற்றும் சட்டசபை செயலாளர் ஆகியோருக்கு நீதிபதி சஞ்சய்குமார் உத்தரவிட்டார்.
பதில் மனு தாக்கல் செய்ய அவகாசம் தேவைப்படுவதாக அவர்கள் கூறியதையடுத்து வழக்கு விசாரணை வருகிற 9-ந்தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது. ஆனால், இதனை எதிர்த்து ரோஜா அப்பீல் மனுத் தாக்கல் செய்தார்.
அதில், ‘சட்டசபையின் பட்ஜெட் கூட்டத்தொடர் 5-ந்தேதி தொடங்குகிறது. இதில் கலந்து கொள்ள விடாமல் தடுக்க விசாரணை திட்டமிட்டு தள்ளி வைக்கப்பட்டு உள்ளது'' என அவர் குறிப்பிட்டிருந்தார்.
இந்த மனுவை விசாரித்த தலைமை நீதிபதி திலிப் பி.கோசலா, நீதிபதி நவீன்ராம் ஆகியோர் கொண்ட பெஞ்ச் 3-ந்தேதிக்கு விசாரணையை ஒத்தி வைத்தனர். அதன்படி நேற்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது.
அப்போது ரோஜா தரப்பில் உச்சநீதிமன்ற மூத்த வழக்கறிஞர் இத்ரா விஜய் சிங் வாதிட்டார். அரசு தரப்பு வழக்கறிஞர் தனது வாதத்தின் போது, ‘ரோஜா மீதான நடவடிக்கை குறித்து விசாரணை குழு அறிக்கை 4-ந்தேதி சமர்பிக்க இருக்கிறது. அதன்பிறகே புதிய மனு தாக்கல் செய்ய முடியும்' எனத் தெரிவித்தார்.
அதனைத் தொடர்ந்து இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, ரோஜாவின் அப்பீல் மனுவைத் தள்ளுபடி செய்தார். மேலும், இந்த வழக்கு தொடர்பாக நீதிமன்றத்திற்கு எந்த உத்தரவும் பிறப்பிக்க இயலாது என அவர் தெரிவித்தார்.
இதனால், நாளை தொடங்க உள்ள ஆந்திர சட்டசபைக் கூட்டத் தொடரில் ரோஜா பங்கேற்க முடியாதநிலை ஏற்பட்டுள்ளது.