திருப்பதி இடைத்தேர்தலில் திடீர் திருப்பம்: தெலுங்கு தேசம் வேட்பாளருக்கு ஒய்.எஸ்.ஆர். காங். ஆதரவு!
திருமலை: திருப்பதி சட்டசபை இடைத்தேர்தலில் போட்டியிடவில்லை என்று அறிவித்துள்ள ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ், தெலுங்கு தேசம் கட்சி வேட்பாளருக்கு ஆதரவு அளிக்க போவதாகவும் அறிவித்துள்ளது.
திருப்பதியில் கடந்த 2014-ம் ஆண்டு நடைபெற்ற சட்டசபை தேர்தலில் தெலுங்கு தேசம் கட்சி சார்பில் வெங்கட்ரமணா போட்டியிட்டு வெற்றி பெற்றார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு வெங்கட்ரமணா உடல்நல குறைவால் மரணம் அடைந்தார்.
இதனால், புதிய எம்.எல்.ஏ.வை தேர்ந்தெடுக்க தேர்தல் ஆணையம் இடைத்தேர்தலை அறிவித்தது. இத்தொகுதியில் பிப்ரவரி 13-ந் தேதி தேர்தல் நடைபெறுகிறது. இங்கு தெலுங்கு தேசம் கட்சி சார்பில், மறைந்த எம்.எல்.ஏ. வெங்கட்ரமணாவின் மனைவி சுகுணா வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். அவர் வேட்புமனுவையும் தாக்கலும் செய்தார்.
ஆனால் ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் கட்சி தமது வேட்பாளரை அறிவிக்கவில்லை. இந்தநிலையில், கட்சியின் தலைவர் ஜெகன்மோகன்ரெட்டி நாங்கள் திருப்பதி இடைத்தேர்தலில் போட்டியிடவில்லை என்றும், தெலுங்கு தேசம் கட்சி வேட்பாளர் சுகுணாவுக்கு ஆதரவு தருகிறோம் என்றும் அறிவித்துள்ளார்.
இதனால் திருப்பதி இடைத்தேர்தலில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது. அதே நேரத்தில் காங்கிரஸ் கட்சி ஸ்ரீதேவி என்ற வேட்பாளரை அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.