ராஜிவ்காந்தி அறக்கட்டளைக்கு ஜாகிர் நாயக் என்.ஜி.ஓ வழங்கிய ரூ.50 லட்சம்! பாஜக காட்டம்
டெல்லி: சர்ச்சையில் சிக்கியுள்ள மத போதகர் ஜாகிர் நாயக்கின் என்.ஜி.ஓவிடமிருந்து ராஜிவ் காந்தி பவுண்டேசன், ரூ.50 லட்சம் நன்கொடை பெற்றுள்ளதாக வெளியாகியுள்ள தகவல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஜாகிர் நாயக்கின் இஸ்லாமிக் ஆராய்ச்சி பவுண்டேசனை, கண்காணித்து வருகிறது மத்திய உள்துறை அமைச்சகம். இந்நிலையில்தான், 2011ல் ராஜிவ் காந்தி பவுண்டேசனுக்கு, ஜாகிர் நாயக் என்.ஜி.ஓ ரூ.50 லட்சத்தை நன்கொடையாக வழங்கியுள்ளதை வெளிப்படுத்தியுள்ளது.
ராஜிவ் பவுண்டேசன், பெண் கல்வி மற்றும் ஏழைகளின் மருத்துவ செலவுக்கு உதவி வருகிறது. இதுகுறித்து ஜாகிர் நாயக் என்.ஜி.ஓ செய்தி தொடர்பாளர் ஆரிப் மாலிக் கூறுகையில், ராஜிவ் காந்தி பவுண்டேசனுக்கு நிதி வழங்கியது உண்மைதான். ஆனால், டாக்கா ரெஸ்டாரண்டில் நடந்த தாக்குதலுக்கு பிறகு, இந்த நிதியை ராஜிவ் பவுண்டேசன், கடந்த ஜூலையில் திருப்பி கொடுத்துவிட்டது.
புரியவில்லை
இதற்கான காரணம் என்ன என்பது ராஜிவ் பவுண்டேசனுக்குத்தான் தெரியும். நாங்கள் இந்த பவுண்டேசன் மட்டுமல்ல மேலும் பல என்.ஜி.ஓக்களுக்கும் கூடத்தான் நன்கொடை கொடுத்துள்ளோம். ஆனால் இது ஏன் சர்ச்சையாகிறது என்பதுதான் புரியவில்லை.
லைசென்ஸ் கொடுத்தார்களே
நன்கொடை கொடுப்பது தப்பா..? என்பதுதான் எனது கேள்வி. கடந்த ஆகஸ்ட் மாதத்தில் எங்கள் அமைப்பிற்கு லைசென்ஸ் புதுப்பிக்கப்பட்டு தரப்பட்டது. ஆனால் அதற்காக அதிகாரிகளை மத்திய அரசு சஸ்பெண்ட் செய்துள்ளது. அதிகாரிகள் விதிமுறைப்படிதான் எங்களுக்கு லைசென்ஸ் கொடுத்தனர். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
தீவிரவாதத்திற்கு தூண்டுதல்
ஜாகிர் நாயக்கின் பேச்சால் கவரப்பட்டு தீவிரவாத செயல்களில் ஈடுபட்டதாக டாக்கா தாக்குதலில் தொடர்புள்ள தீவிரவாதி வாக்குமூலம் அளித்ததை தொடர்ந்து, அவரது என்.ஜி.ஓ கண்காணிப்பு வளையத்திற்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. பீஸ் டிவி என்ற பெயரில் அவர் நடத்தி வரும், சேனலுக்கும், ஜாகிர் நாயக் அமைப்புக்கும் வங்கதேசம் தடை விதித்துள்ளது.
பாஜக விளாசல்
இந்நிலையில், இந்த நன்கொடை விவகாரத்தை பாஜக கண்டித்துள்ளது. தேச விரோத செயல்களுக்கு பாதுகாப்பு அளிக்கவே இந்த நன்கொடையை ராஜிவ்காந்தி பவுண்டேசன் பெற்றுள்ளது. நன்கொடை பெற்றபோது மத்தியில் ஆட்சியில் இருந்து காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசாங்கம்தான் என பாஜக குற்றம்சாட்டியுள்ளது.