உறைந்து கிடக்கும் வடமாநிலங்கள்- வாட்டி, வதைக்கும் குளிர்.. நடுநடுங்கும் மக்கள்
டெல்லி: தமிழகத்தில் அடித்து, துவைத்த வெள்ளம் ஒருவழியாக ஓய்வெடுக்க சென்றுள்ள நிலையில் அடுத்த கட்டமாக வடமாநிலங்களில் கடும் குளிர் வாட்டி எடுக்கத் துவங்கியுள்ளது.
வடமாநிலங்களில் குளிர் பனி கடுமையாக கொட்டத் துவங்கியுள்ளது. இதனால் இரவு நேரங்களில் பனிப்பொழிவு அதிகரித்து வருகிறது. குளிர்வாடை காற்று உடலை வாட்டுவதால் வடமாநில மக்கள் கனத்த கம்பிளி ஆடைகளை அணிய தொடங்கியுள்ளனர்.
இமாச்சலப்பிரதேசம் மாநிலம், சிம்லாவில் இரவு நேர வெப்பநிலை 6 டிகிரியாக குறைந்துள்ளது. இதனால் அங்குள்ளவர்கள் இரவில் வீடுகளைவிட்டு வெளியேறாமல் உள்ளேயே தங்கியுள்ளனர். மேலும், வாகன ஓட்டிகள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
பஞ்சாப், ஹரியாணா மாநிலங்களில் கடந்த 10 நாள்களாக பகல், இரவு வேளைகளில் கடும் பனிப்பொழிவு காணப்படுகிறது. அடுத்து வரும் நாட்களில் பனிப்பொழிவு அதிகரிக்கும் என்றும், வெப்பநிலை மேலும் குறையும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.