ஜி்ம்பாப்வேயில் நீடிக்கும் குழப்பம்.. அதிபர் பதவியில் தொடருவேன்: முகாபே பிடிவாதம்
ஜிம்பாப்வே அதிபர் ராபர்ட் முகாபே, பதவி விலக வேண்டும் என வலுத்துவரும் கோரிக்கையை நிராகரித்துள்ளார். அடுத்த சில வாரங்களுக்கு தொடர்ந்து பதவியில் இருப்பேன் என்று அவர் தெரிவித்துள்ளார்.
தொலைக்காட்சி நேரலையில் பேசிய அதிபர் முகாபே, டிசம்பர் மாதம் நடக்கவுள்ள நாடாளுமன்ற கூட்டத்தை தலைமையேற்று நடத்துவேன் என்று தெரிவித்துள்ளார்.
அவரின் ஸானு- பி.எஃப் கட்சி, அவரை கட்சித்தலைவர் பதவியிலிருந்து நீக்கியதோடு, அதிபர் பதவியிலிருந்து விலக 24 மணிநேரத்திற்கு குறைவான கெடு அளித்திருந்தது.
இரண்டு வாரங்களுக்கு முன்பு, தனக்கு அடுத்த பதவியில் இருந்த எமர்சன் மனங்காக்வாவை, முகாபே பதவி நீக்கம் செய்ததை தொடர்ந்து இந்த நெருக்கடி உருவானது.
முகாபேவிற்குப் பிறகு அவரின் மனைவியை அதிபராக்கும் நடவடிக்கையாக இதை, ராணுவ தலைவர் பார்த்தார்.
எதிர்பார்ப்புகளை உடைத்த முகாபே
முகாபே பதவி விலகுவதை அறிவிப்பார் என்று பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட, தொலைக்காட்சி பேச்சைக் காண மக்கள் கூட்டம் ஹராரேவில் கூடியது.
பதவி விலகலுக்கு பதிலாக, அவர், "கட்சியின் நாடாளுமன்ற கூட்டம் இன்னும் சில வாரங்களில் நடக்கவுள்ளது. அதற்கு நான் தலைமையேற்பேன் " என்றார்.
ஸானு பி.எஃப் கட்சி, ராணுவம் மற்றும் பொதுமக்கள் தெரிவித்த விமர்சனங்களை ஏற்றுக்கொண்ட அவர், நாடு மீண்டும் பழைய நிலைக்கு மாறவேண்டியது அவசியம் என்று வலியுறுத்தினார்.
"ராணுவத்தினரின் நடவடிக்கைகளில் என்ன சாதக பாதகங்கள் இருந்தாலும், அவர்களின் கவலைகளை, தலைமைத் தளபதி என்ற முறையில் நான் ஒப்புக்கொள்கிறேன்" என்று அவர் தொலைக்காட்சியில் பேசினார்.
கடந்த வாரம், அரசு ஒளிபரப்பை ராணுவம் தனது கட்டுப்பாட்டில் எடுத்த நகர்வை அவர் குறிப்பிட்டு இவ்வாறு தெரிவித்தார்.
முகாபே பதவி விலக ஒப்புக்கொண்டு, பிறகு தன் எண்ணத்தை மாற்றிருக்கலாம் என்று இந்த சூழ்நிலையை புரிந்துகொள்வதாக, பிபிசியின் ஆஃப்ரிக்க சேவை ஆசிரியர் ஃபெர்கல் கேன் தெரிவிக்கிறார்.
பிற செய்திகள்:
- ஆஸ்திரேலியா: 42 ஆயிரம் ஆண்டுகளுக்கு பின் தாய்மண் திரும்பிய எலும்புக்கூடு
- அன்றைய இந்திரா - இன்றைய மோடி: "இருவருக்கும் ஒரே முகமா?"
- தீரன் படத்தின் உண்மைக் கதை: பவரியா கொள்ளையர்களைப் பிடித்தது எப்படி?
- மொரொக்கோ : உணவு விநியோகத்தின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசிலில் 15 பேர் பலி