மாட்டுக்கறி, பன்றிக்கறியை நாங்கள் டெலிவரி செய்ய மாட்டோம்.. சொமேட்டோ ஊழியர்கள் திடீர் ஸ்டிரைக்
சொமெட்டோ நிறுவன ஊழியர்கள் ஸ்டிரைக் செய்து வருகிறார்கள்
கொல்கத்தா: "மாட்டுக்கறி, பன்றி கறியை டெலிவரி செய்ய சொல்லுகிறார்கள்.. எங்களால முடியாது" என்ற சொமேட்டோ டெலிவரி ஊழியர்கள் இன்றுமுதல் ஸ்டிரைக் செய்து வருகிறார்கள்.
மத்திய பிரதேசத்தில் தின தினங்களுக்கு முன்பு, சொமாட்டோ நிறுவனத்துக்கு ஒருவர் சாப்பாடு கேட்டு ஆன்லைனில் ஆர்டர் செய்தார். உடனே நிறுவனமும் சாப்பாட்டை கொண்டு செல்லும் டெலிவரி பாய் பெயரை குறிப்பிட்டு பதிவிட்டிருந்தது.
அந்த டெலிவரி பாய் ஒரு முஸ்லீம். பெயரை பார்த்ததும் அந்த நபர் டென்ஷன் ஆகிவிட்டார்."என்னது.. சாப்பாடு கொண்டு வர்ற டெலிவரி பாய் ஒரு ஹிந்து கிடையாதா.. அப்ப எனக்கு சாப்பாடே வேணாம்" என்று சொமேட்டாவில் ஆர்டர் செய்த உணவை கேன்சல் செய்தார்.
மதம் கிடையாது
இதற்கு சொமேட்டா நிறுவனமும், "உணவுக்கு மதம் கிடையாது, உணவே ஒரு மதம் தான்" என்று நோஸ்-கட் பதிலை அந்த நபருக்கு தந்தது. இந்த விஷயம் நாடு முழுவதும் பெரிய சர்ச்சையை ஏற்படுத்தினாலும், சமூக ஊடகங்களில் பலர் சொமேட்டோவை பாராட்டவே செய்தனர்.
சர்ச்சை
இப்படிப்பட்ட நிலையில், மாட்டுக்கறி, பன்றிக்கறி உணவு வகைகளை டெலிவரி செய்ய முடியாது என்று அந்நிறுவன ஊழியர்கள் கூறி இருப்பது மீண்டும் விவாத பொருளாக மாறி உள்ளது. குறிப்பாக மேற்கு வங்க மாநிலம் ஹவுராவில் இருக்கும் சொமேட்டோ டெலிவரி செய்யும் இஸ்லாமிய, இந்து ஊழியர்கள் போர்க்கொடி தூக்கி உள்ளனர்.
தயக்கம்
"சிலர் மாட்டுக்கறி, பன்றிக்கறி உணவுகளை ஆர்டர் செய்கிறார்கள். ஆனால், இது, கொண்டு செல்பவரின் மத நம்பிக்கைகளை அதிகமாகவே புண்படுத்துகிறது. இந்துக்களுக்கு மாட்டு கறியையும், இஸ்லாமியர்களுக்கு பன்றி கறியையும் விநியோகிப்பது எங்களுக்கு தயக்கமாக இருக்கிறது. இதை பற்றி நிறுவனத்திடம் சொல்லியும் எங்களுக்கு எந்த பதிலும் கிடைக்கவில்லை என்பதால் நாங்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட உள்ளோம்" என்று தெரிவித்துள்ளனர்.
|
ஸ்டிரைக்
இதை பற்றி சொமேட்டோ நிறுவனமோ "இந்த பணியின் இயல்பு குறித்து எங்கள் ஊழியர்களுக்கு சந்தேகத்திற்கு இடமில்லாமல் ஏற்கனவே விளக்கி உள்ளோம். இருந்தாலும், ஹவ்ராவில் ஒரு சிறு குழுதான் இப்படி கவலை எழுப்பி இருக்கிறார்கள். எனினும், இந்த பிரச்சனையை முடிவுக்கு கொண்டு வரும் முயற்சியில் இருக்கிறோம்" என்று தெரிவித்துள்ளது.