23 நாட்களில் 1,066 பேர் கைது... ஓமன் போலீசார் அதிரடி
மஸ்கட்: ஓமனில் கடந்த 23 நாட்களில் விதி மீறல் மற்றும் குற்றவியல் நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக 1,066 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மனிதவள அமைச்சகம் மற்றும் ராயல் ஓமன் போலீஸ் வெளியிட்டுள்ள தகவலின்படி, காலாவதியான பாஸ்போர்ட் வைத்திருந்த 554 பேர் சொந்த நாடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். 490 தொழிலாளர்கள் சட்ட விதிமீறல்களில் ஈடுபட்டுள்ளனர்.
அவர்களில் 64 பேர் மஸ்கட் சர்வதேச விமான நிலையத்திலிருந்து நாடு கடத்தப்பட்டனர். இதனை தவிர, திருட்டு, போதை பொருட்கள், சட்டவிரோத ஊடுருவல், மற்றும் பிச்சைஎடுப்பவர்கள் கைது செய்யப்பட்டுள்னர். மேலும், கைது செய்யப்பட்ட 1,066 வெளிநாட்டவர்களில், ஒழுக்கினமாக இருந்ததாக 68 பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஜனவரி 1 முதல் 23 வரையில் குறைந்தபட்சம் 40,000 லிட்டர் டீசல் கடத்த முயன்றதாகவும், சட்டவிரோதமாக நாட்டிற்குள் நுழைந்ததாகவும் ஆசியாவைச் சேர்ந்த 16 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபடுபவர்கள் பற்றி தெரிந்தால் உடனடியாக தகவல் அளிக்கும் படி, அந்நாட்டு போலீஸ் கேட்டுக்கொண்டுள்ளது.