2015ல் அய்லான் குர்தி.. 2017ல் ஒரு மாத ரோஹிங்கியா முஸ்லீம் குழந்தை.. உலகை உலுக்கிய படங்கள்!
ரோஹிங்கியாவில் உயிருக்கு பயந்து தப்பி வந்தவர்களின் கப்பல் திடீரென கவிழ்ந்ததில் ஒரு மாத குழந்தை உயிரிழந்துள்ளது, இறந்த குழந்தையை தாய் அணைத்து அழும் புகைப்படம் நெஞ்சை உலுக்குகிறது.
வங்கதேசம் : மியான்மரில் இருந்து உயிருந்து பயந்து வரும் அகதிகளாக வரும் ரோஹிங்கியா முஸ்லீம்களின் கப்பல் ஒன்று கடலில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் ஒரு மாத குழந்தை உயிரிழந்துள்ளது. இறந்த குழந்தைகயை தாய் அணைத்துக் கொண்டு கதறும் புகைப்படம் நெஞ்சை உலுக்கும் வகையில் அமைந்துள்ளது.
மியான்மர் நாட்டில் சிறுபான்மையினராக உள்ள ரோஹிங்கியா முஸ்லிம்களுக்கு எதிராக அந்நாட்டு ராணுவம் கடும் நடவடிக்கை எடுத்து வருகிறது. உயிருக்குபயந்து ஆயிரக்கணக்கான மக்கள் அண்டை நாடான வங்க தேசத்துக்கும் அங்கிருந்து இந்தியாவுக்கும் தஞ்சம் அடைந்து வருகின்றனர்.
இதே போன்று ஹமிதா என்ற பெண்மணியும் தன்னடைய கணவர் நாசிர் அஹமது மற்றும் இரண்டு மகன்களுடன் 18 அகதிகள் ஒரு சிறிய படகில் வங்கக் கடலில் வங்கதேசத்தின் ஷா போரில் ட்வீப்பிற்கு வந்துள்ளனர். கப்பல் கரையை நெருங்கிக் கொண்டிருந்த போது திடீரென கப்பல் கவிழ்ந்ததில் அனைவரும் நீரில் மூழ்கியுள்ளனர்.
நெஞ்சை உருக்கும் காட்சி
கப்பல் மூழ்கியதையடுத்து மக்கள் கூக்குரலிட்ட நிலையில் அருகில் இருந்தவர்கள் பதறியடித்துக் கொண்டு அவர்களை மீட்கச் சென்றுள்ளனர். ஆனால் துரதிஷ்டவசமாக 5 வாரமே ஆன ஹமீதாவின் குழந்தை நீரில் மூழ்கி இறந்துவிட்டது. இறந்த குழந்தையை அணைத்தபடி ஹமீதா அழும் காட்சி நெஞ்சை உருக்குவதாக அமைந்துள்ளது.
அப்பட்டமான படம்
தண்ணீரில் விழுந்த குழந்தை எப்படியாவது பிழைத்து விடாதா என்று பதற்றத்துடன் தூக்கி வருகிறார் ஹமீதாவின் கணவர். உயிருக்கு பயந்து கடல் வழியாகவும், தரை வழியாகவும் தப்பி வரும் ரோஹிங்கியா முஸ்லீம்கள் சந்திக்கும் அவலங்களை விலக்கும் அப்பட்டமான படங்களான இவற்றை ராய்டர்ஸ் செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ளது.
சிரியா அகதிகள்
கடந்த 2015ல் உள்நாட்டு போர் நடைபெற்று வந்த சிரியாவில் இருந்து உயிர் பிழைக்க ஏராளமான மக்கள் அகதிகளாக புறப்பட்டு ஐரோப்பிய நாடுகளில் தஞ்சம் அடைந்தனர். அவர்கள் சட்ட விரோதமாக அனுமதி இல்லாத படகுகளில் உயிரை பணயம் வைத்து அங்கிருந்து தப்பி வருகின்றனர்.
அதிர்வை ஏற்படுத்திய அய்லான் குர்தி படம்
அவ்வாறு வரும் படகுகள் நடுக்கடலில் மூழ்குவதால் அகதிகள் உயிரிழந்தும் போனர். சிரியாவில் இருந்து வந்த அகதிகள் படகு துருக்கியில் கடலில் மூழ்கியது. இந்த விபத்தில் அய்லான் குர்தி என்ற 3 வயது சிறுவனின் உடல் துருக்கி கடற்கரையில் ஒதுங்கியது. அவனது முகம் கடல் மணலில் புதைந்த நிலையில் ஊடகங்களில் புகைப்படம் வெளியானது. இது உலக மக்களின் மனதை உலுக்கியது. அதுவே ஐரோப்பிய நாடுகளில் அகதிகள் அடைக்கலம் பெற வழிவகை செய்தது.
நெஞ்சை உலுக்கும் படம்
அதே போன்று ரோஹிங்கியா முஸ்லீம்களின் அகதிகள் வாழ்க்கையை காட்டுகிறது இந்த இறந்த பிஞ்சுக் குழந்தையின் புகைப்படம். மியான்மர் ராணுவத்தின் நடவடிக்கைக்கு பயந்து உயிரைக் காப்பாற்றிக் கொள்ள இது வரையில் ஏறத்தாழ 40 ஆயிரம் பேர் வங்கதேசத்திற்கு தப்பி வந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.