1 வருடம் சிறை.. 90 லட்சம் அபராதம்.. மனைவியின் போனை சோதனையிடும் ஆண்களுக்கு சவுதியில் தண்டனை
மனைவிக்கு தெரியாமல் அவரது போனை எடுத்து சோதனை செய்யும் ஆண்களுக்கு தண்டனை வழங்கப்படும் என்றும் சவுதி அரேபிய அரசு அறிவித்து இருக்கிறது.
ரியாத்: மனைவிக்கு தெரியாமல் அவரது போனை எடுத்து சோதனை செய்யும் ஆண்களுக்கு தண்டனை வழங்கப்படும் என்றும் சவுதி அரேபிய அரசு அறிவித்து இருக்கிறது.
மிகவும் அதிக அளவில் இதற்கு தண்டனை வழங்கப்படும் என்று கூறப்பட்டு இருக்கிறது. சவுதியின் முடி இளவரசராக முகமது பின் சல்மான் பதவியேற்றத்தில் இருந்து அங்கு நிறைய மாற்றங்கள் கொண்டு வருகிறார்.
முக்கியமாக பெண்களுக்கு நிறைய சுதந்திரங்கள் வழங்கப்பட்டு வருகிறது. இதற்கு அங்கு பாராட்டும் எதிர்ப்பு நிலவி வருகிறது.
பெண் சுதந்திரம்
பெண்களுக்கு ராணுவத்தில் சேர அனுமதி அளித்து சவுதி முடி இளவரசர் அதிரடி உத்தரவை பிறப்பித்து இருக்கிறார். 2018 மார்சில் இருந்து சவுதியில் தியேட்டர்கள் திறக்கப்படும் என்றார். 2018ல் இருந்து பெண்கள் கார் ஓட்ட லைசென்ஸ் வழங்கப்படும் என்று அறிவித்தார். விரைவில் சவுதியில் பெண்கள் பர்தா அணிய கட்டாயம் இல்லை என்று சட்டம் கொண்டுவரப்படலாம் என்றும் கூறப்பட்டு இருக்கிறது.
தண்டனை
தற்போது மனைவிக்கு தெரியாமல் அவர்கள் போனை எடுத்து சோதனை செய்யும் ஆண்களுக்கு தண்டனை வழங்கப்படும் என்றும் சவுதி அரேபிய அரசு அறிவித்து இருக்கிறது. அதன்படி மனைவிக்கு தெரியாமல் அவர்களின் போனை எடுத்து பார்ப்பது, கேலரியை பார்ப்பது, சமூக வலைதள கணக்குகளை சோதனை செய்வது, யாருடன் பேசுகிறார் என்று சண்டை போடுவது எல்லாம் தண்டனைக்கு உரிய குற்றம் ஆகும்.
எவ்வளவு
இந்த குற்றத்திற்கு ஒரு வருடம் வரை சிறை அளிக்கப்படலாம். அதே சமயம் 85 லட்சம் முதல் 90 லட்சம் அவரை அபராதம் விதிக்கப்படலாம். சவுதியில் சமீப காலங்களில் மொபைல் ரீதியாக நிறைய குற்றங்கள் நடைபெற்று வருகிறது. இதை இதன் மூலம் கட்டுப்படுத்த முடியும் என்று கூறப்படுகிறது.
காரணம்
பெண்களின் சுதந்திர தேவைதான் இந்த சட்டத்திற்கு பின் முக்கிய காரணம் என்று முகமது பின் சல்மான் தெரிவித்துள்ளார். பெண்கள் அவர்கள் விருப்பப்படி இணையத்தை பார்க்க வேண்டும், அவர்களை யாரும் கட்டுப்படுத்த கூடாது என்றுள்ளார். ஆண்களின் வேவு பார்க்கும் குணத்தை போக்கவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு இருக்கிறது என்றுள்ளார்.