ஊழல் குற்றச்சாட்டு: பாக். முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப்புக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை!
பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப்புக்கு 10 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப்புக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் ஊழல் செய்து வெளிநாட்டில் பணம் பதுக்கியதாகவும், வெளிநாட்டில் சொத்துக்களை வாங்கி குவித்திருப்பதாகவும் அவர் மீது வழக்கு தொடரப்பட்டது.
நவாஸ் ஷெரீப் ஊழல் பணத்தில் லண்டனில் அடுக்குமாடி குடியிருப்புகளை கட்டியிருப்பதாகவும் அவர் மீது புகார் கூறப்பட்டது. இதுதொடர்பான வழக்கில் நீண்ட தாமதத்திற்கு பிறகு பாகிஸ்தானின் என்ஏபி எனும் தேசிய கணக்கியல் பணியக நீதிமன்றம் இன்று பரபரப்பு தீர்ப்பை வழங்கியுள்ளது.
நவாஸ்க்கு 10 ஆண்டுகள் சிறை
அதாவது ஊழல் குற்றச்சாட்டுக்கு உள்ளான நவாஸ் ஷெரீப்புக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. சிறை தண்டனையை ஏகோபித்த காலத்தில் அனுபவிக்கவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ரூ.75 கோடி அபராதம்
மேலும் 75 கோடி ரூபாய் அளவுக்கு அவருக்கு அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. மேலும் லண்டன் பார்க் லேன் பகுதியில் கட்டப்பட்டுள்ள நான்கு சொகுசு அடுக்குமாடி குடியிருப்புகளை பறிமுதல் செய்யவும் பாகிஸ்தான் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
மகளுக்கு 7 ஆண்டுகள்
இந்த வழக்கில் நவாஸ் ஷெரீப்பின் மகள் மரியமுக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. நீதிமன்றத்திற்கு தவறான ஆவணங்களை அளித்ததற்காக அவருக்கு மேலும் ஓராண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
மருமகனுக்கு ஒரு ஆண்டு
மேலும் மரியமுக்கு 18 கோடி ரூபாய் அளவுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. நவாஸ் ஷெரீப்பின் மருமகன் சஃப்தார் அவானுக்கு ஓராண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
100 பக்க தீர்ப்பு
இந்த பரபரப்பு தீர்ப்பு 100 பக்கங்களை கொண்டதாக இருந்தது. இந்த தீர்ப்பை நீதிபதி முகமது பஷீர் வாசித்தார்.
மனைவிக்கு சிகிச்சை
நவாஸ் ஷெரீப் மற்றும் அவரது குடும்பத்தினர் தற்போது லண்டனில் உள்ளனர். நவாஸ் ஷெரீப்பின் மனைவிக்கு புற்றுநோய் சிகிச்சைக்காக அவர்கள் லண்டனில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.