நிலநடுக்கத்தை அடுத்து 100 முறை அதிர்ந்த ஜப்பான்: இடிபாடுகளில் இருந்து காயம் இன்றி 8 மாத குழந்தை மீட்
டோக்கியோ: ஜப்பானில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் வீடுகள் இடிந்து விழுந்ததில் 9 பேர் பலியாகினர், 700க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளனர். இந்நிலையில் இடிபாடுகளில் இருந்து 8 மாத பெண் குழந்தை சிறுகாயம் இன்றி மீட்கப்பட்டுள்ளது. நிலநடுக்கத்தை அடுத்து 100 முறை நிலஅதிர்வு ஏற்பட்டுள்ளது.
ஜப்பானின் தென்மேற்கு தீவான கியூஷூவில் வியாழக்கிழமை இரவு 9.26 மணிக்கு சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 6.5 ஆக பதிவாகியிருந்தது. நிலநடுக்கத்தால் பல வீடுகள் இடிந்து விழுந்தன, சாலைகள் பெரும் சேதம் அடைந்தன. தெருவெல்லாம் இடிந்து விழுந்த கட்டிடங்களின் சிதறல்களாக கிடந்தன.
இடிபாடுகளில் சிக்கி 9 பேர் பலியாகியுள்ளனர், 761 பேர் காயம் அடைந்துள்ளனர். பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என்று அஞ்சப்படுகிறது. நிலநடுக்கத்தை அடுத்து கியூஷூ தீவில் இருந்து 44 ஆயிரம் பேர் வெளியேற்றப்பட்டுள்ளனர்.
நிலநடுக்கத்தை தொடர்ந்து 100க்கும் மேற்பட்ட முறை ஆப்டர்ஷாக் எனப்படும் நில அதிர்வுகள் ஏற்பட்டதாக கியோடோ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. இதற்கிடையே இடிபாடுகளில் இருந்து 8 மாத பெண் குழந்தை சிறுகாயம் இன்றி உயிருடன் மீட்கப்பட்டுள்ளது அனைவரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளது.
கியூஷூ தீவில் பார்க்கும் இடம் எல்லாம் வீடுகள் இடிந்து தரைமட்டமாகிக் கிடக்கின்றது அல்லது சேதமடைந்து காணப்படுகிறது. கியூஷூ தீவில் உள்ள குமமோட்டோ என்ற இடத்தை மையமாகக் கொண்டு 10 கிலோமீட்டர் ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.