தப்பியோடிய அப்பாவிகள் 100 பேரின் தலையை துண்டித்த ஐ.எஸ் தீவிரவாதிகள்... மோசூல் பயங்கரம்
மோசூல் நகரில் ஐ.எஸ் தீவிரவாதிகளிடம் இருந்து தப்ப முயன்ற அப்பாவி மக்கள் 100 பேர் தலை துண்டிக்கப்பட்டு கொல்லப்பட்டுள்ளனர்.
மோசூல்: ஈராக்கில் தங்களது பிடியில் உள்ள மோசூல் நகரில் இருந்து தப்ப முயன்ற 100 பேரை ஐஎஸ் தீவிரவாதிகள் தலையை துண்டித்து படுகொலை செய்துள்ளனர்.
ஐ.எஸ் தீவிரவாதிகளின பிடியில் உள்ள மோசூல் நகரை கைப்பாற்ற ஈராக் ராணுவம் மற்றும் அமெரிக்க கூட்டுப்படைகள் கடுமையாக போராடி வருகின்றனர். தீவிரவாதிகளுடன் நடைபெறும் சண்டையில் ஏராளமான பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் தீவிரவாதிகளின் பிடியில் இருந்த ஹம்மாம் அல்-அலில் உள்ளிட்ட பகுதிகளை கைப்பற்றிய ஈராக் ராணுவத்தினர் அங்குள்ள விவசாய கல்லூரிக்கு வெளியே புதிதாக புதைக்கப்பட்டிருந்த பகுதியை தோண்டிப் பார்த்தனர். அப்போது அதில் தலையில்லாமல் புதைக்கப்பட்டிருந்த 100 பேரின் சடலங்களை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.
கொல்லப்பட்டவர்கள் அனைவரும் தீவிரவாதிகளின் பிடியில் இருந்து உயிருக்கு பயந்து தப்பியோடிய போது கொல்லப்பட்டிருக்கலாம் என ஈராக் ராணுவம் தெரிவித்துள்ளது.
மோசூல் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள 9 வயது சிறுவர்களை பிடித்துச் செல்லும் ஐஎஸ் படையினர் அவர்களை ஈராக் படைக்கு எதிராக போரிட வைப்பதாக தகவல் வெளியாகியுள்ளது
மேலும் ஈராக் ராணுவம் மற்றும் கூட்டுப்படைகளுக்கு எதிராக அந்நாட்டு மக்கள் 25 ஆயிரம் பேரை மனித கேடயங்களாக ஐஎஸ் தீவிரவாதிகள் பயன்படுத்தி வருவதாக ஐ.நா செய்திதொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
சிரியாவில் ஆதிக்கம் செலுத்தி வரும் ஐஎஸ் அமைப்பினர் இதுவரை 480க்கும் மேற்பட்ட அப்பாவிகளை கொன்றுள்ளதாகவும் அவர்களில் 300க்கு மேற்பட்டவர்கள் சிறுவர்கள் என்றும் லண்டனை அடிப்படையாக கொண்ட மனித உரிமைகள் அமைப்பு தெரிவித்துள்ளது.