தென் கொரியாவில் 100 கார்கள் அடுத்தடுத்து மோதி விபத்து – 2 பேர் பலி, 68 பேர் படுகாயம்
சியோல்: தென்கொரியாவின் தலைநகரான சியோல் அருகே மூடுபனி காரணமாக சுமார் 100 கார்கள் அடுத்தடுத்து மோதி பெரும் விபத்து நேரிட்டது. இதில் 2 பேர் உயிரிழந்தனர். 68 க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர்.
சியோல் அருகே இன்சியான் சர்வதேச விமான நிலையம் உள்ளது. அங்கு, சியோல் நகரையும் விமான நிலையத்தையும் இணைக்கும் வகையில் பிரமாண்ட நெடுஞ்சாலை அமைக்கப்பட்டுள்ளது.
தென்கொரியாவில் தற்போது கடும் பனிப்பொழிவு நிலவுகிறது. இதன்காரணமாக நேற்று காலையில் நெடுஞ்சாலையின் முக்கியமான இணைப்புப் பாலத்தில் இரண்டு கார்கள் ஒன்றுடன் ஒன்று வேகமாக மோதிக் கொண்டன.
இதைத் தொடர்ந்து இருபுறமும் வந்த கார்கள் அடுத்தடுத்து மோதி நொறுங்கின. ஒட்டுமொத்தமாக சுமார் 100 க்கும் மேற்பட்ட கார்கள் சம்பவ இடத்தில் முட்டி மோதின.
இந்த விபத்தில் 2 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந் தனர். 68 க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். அவர்களில் பலரின் நிலைமை கவலைக் கிடமாக உள்ளது.
ஏற்கனவே, இதே போன்ற விபத்து ஒன்று அமெரிக்காவின் வெர்ஜினியா மாநிலத்தில் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.