பிச்சையெடுத்து தானம் செய்யும் 100 வயது தாத்தா... ‘வாழும் துறவி’ எனப் புகழ்கிறது பல்கேரியா
கடந்த ஏழு வருடங்களுக்கு முன்னால் ஐரோப்பிய ஒன்றியத்தில் இணைந்தது பல்கேரியா. ஆனபோதும் அங்கு சராசரி மாத வருமானம் 420 யூரோக்களாக உள்ளதால், பொருளாதார மேம்பாட்டில் ஏழை நாடாகவே பல்கேரியா கருதப்படுகிறது.
இந்நிலையில் அங்கு வசித்துவரும் பிச்சைக்காரர் ஒருவர் தனக்குக் கிடைத்த பணத்தை தான் வசிக்கும் இடத்தில் உள்ள தேவாலயத்திற்குத் தொடர்ந்து கொடுத்து வந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
தற்போது 100 வயதாகும் டோப்ரி டோப்ரேவ் என்ற பிச்சைக்காரர் கடந்த 20 வருடங்களுக்கும் மேலாக பல்கேரியாவின் தலைநகரான சோபியாவில் பிச்சை எடுத்து வாழ்ந்து வருகிறார். இவர் தனக்கு மற்றவர்கள் அளிக்கும் பணத்தை எல்லாம் அங்குள்ள அலெக்சாண்டர் நெவ்ஸ்கி தேவாலயத்திற்குக் கொடுத்து வந்துள்ளார்.
கடந்த 2009-ல் அந்நாட்டு நாணயத்தின் மதிப்பின்படி 35,700 லெவாவை (24,900 அமெரிக்க டாலர்கள்) அவர் அளித்ததாக அந்த தேவாலயத்தின் அறங்காவலர்கள் குழுவின் தலைவர் பிஷப் டிகோன் தெரிவித்துள்ளார். இதுபோக, டோப்ரி சுமார் 2,500 முதல் 10,000 யூரோ வரை தங்களுக்கும் அளித்துள்ளதாகப் பல மடாலயங்கள் கூறுகின்றன.