10000 வீடுகளில் திடீர் பவர் கட்! குழம்பிய அதிகாரிகள்! விசாரித்து பார்த்தா.. வேலையை காட்டிய "பாம்பு"
டோக்கியோ: உலகம் முழுக்க அணில்கள் காரணமாக பல இடங்களில் மின்சார தடைகள் ஏற்பட்டுள்ளன. மின்கம்பிகளில் அணில்கள் செல்லும் போது, இரண்டு கம்பிகள் ஒன்றோடு ஒன்று உரசி, இரண்டு கம்பிகளும் இணைந்து அதன் மூலம் மின் தடை ஏற்படுகிறது. அந்த வகையில் தற்போது பாம்பு ஒன்று 10 ஆயிரம் வீடுகளில் மின்தடையை ஏற்படுத்தி உள்ளது. எங்கு தெரியுமா? மேற்கொண்டு படியுங்கள்!
கடந்த வருடம் தமிழ்நாட்டில் பராமரிப்பு செய்யப்படாத காரணத்தால் பல்வேறு இடங்களில் மின்தடைகள் ஏற்பட்டன. இதற்கு விளக்கம் அளித்த மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, கடந்த டிசம்பருக்கு பின் முந்தைய அரசு பராமரிப்பு பணிகளை செய்யவில்லை. மரங்கள், செடிகளை அகற்றவில்லை.
இதனால் பல இடங்களில் மின் கம்பிகள் இருக்கும் இடங்களில் மரங்கள் வளர்ந்து உள்ளன. கிளைகள் இந்த கம்பிகளுக்கு இடையே செல்வதால் அவ்வப்போது கம்பிகள் உரசி மின்தடை ஏற்படுகிறது.
தமிழ்நாடு இருக்கட்டும்! உ.பி, குஜராத், ஆந்திராவை விரட்டும் மின்தடை! 12 மாநிலங்களுக்கு பறந்த வார்னிங்
அணில்கள்
மேலும் அணில்கள் இந்த கிளைகளில் இருந்து மின்கம்பிகளுக்கு செல்வதால், இரண்டு மின் கம்பிகள் உரசி மின்சார தடை ஏற்படும் நிலை ஏற்பட்டுள்ளது என்று விளக்கம் அளித்தார். இதை பலரும் விமர்சனம் செய்து இருந்தனர். அதன்பின்தான் உலகம் முழுக்கவே அணில்கள் காரணமாக பல இடங்களில் மின்சாரத் தடை ஏற்படும் விஷயம் தெரிய வந்தது. பல்வேறு நாடுகளில் இந்த சம்பவம் நடந்து உள்ளது. முக்கியமாக பாகிஸ்தான், இலங்கை ஆகிய நாடுகளில் அதிகம் நடந்துள்ளது.
உலகம் முழுக்க நடந்துள்ளது
முக்கியமாக அமெரிக்காவின் நார்த் கரோலினாவில் சில மாதங்களுக்கு முன் ஏற்பட்ட மிகப்பெரிய மின்தடை பிளாக் அவுட்டிற்கு அணில்கள்தான் காரணம் என்று கண்டுபிடிக்கப்பட்டது. அமெரிக்காவின் லெக்சிங்டன் கவுண்டியிலும் இதேபோல் அதிக முறை அணில்கள் மூலம் மின்தடை ஏற்பட்டதும் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த நிலையில்தான் ஜப்பானில் பாம்பு ஒன்று 10 ஆயிரம் வீடுகளில் மின்சாரத் தடையை ஏற்படுத்தி உள்ளது.
ஜப்பான் சம்பவம்
ஜப்பானில் கோரியாமா நகரத்தில் இந்த சம்பவம் நடைபெற்று உள்ளது. சரியாக பிற்பகல் 2.10 மணிக்கு கடந்த ஜூன் 29ம் தேதி அங்கு மின்சாரம் நின்றது. மொத்தம் 10 ஆயிரம் வீடுகளில் மின்சாரம் நின்றது. இதையடுத்து உடனே மக்கள் மின்சார வாரியத்திற்கு போன் செய்தனர். எங்கள் வீட்டில் மின்சாரம் இல்லை, எங்கள் கடையில் மின்சாரம் இல்லை என்று பலரும் புகார் அளித்தனர். அதன்பின்தான் அதிகாரிகளுக்கே 10 ஆயிரம் வீடுகளில் மின்சாரம் போன விஷயம் தெரிய வந்துள்ளது.
நீண்ட நேரம்
நீண்ட நேரம் முயன்றும் இதை சரி செய்ய முடியவில்லை. இதையடுத்து பல்வேறு ஸ்டேஷன்களில் என்ன தவறு என்று சோதனை செய்யப்பட்டது. எல்லா ஸ்டேஷன்களிலும் வயர் சரியாக இருந்துள்ளது. ஆனாலும் மின்சாரம் வரவில்லை. இந்த நிலையில் தொடர் விசாரணையில், சப் ஸ்டேஷன் ஒன்றில் பாம்பு மூலம் மின்தடை ஏற்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. அங்கு இருக்கும் பியூஸ் பகுதிகளுக்கு இடையில் பாம்பு சென்று ஷார்ட் சர்க்யூட் ஏற்படுத்தி உள்ளது.
மின்சாரம் தடை
இதனால் மின்சாரம் தடை பட்டது. 10 ஆயிரம் வீடுகளுக்கு மின்சாரம் தடை பட்டது. அதோடு சம்பவ இடத்திற்கு அதிகாரிகள் சென்ற போதும் அந்த பாம்பு தொடர்ந்து தீ பற்றி எரிந்து கொண்டு இருந்துள்ளது. அணில் காரணமாக மின்தடை ஏற்படும் என்பது உலகம் முழுக்க நிரூபணம் ஆகியும் நிலையில் தற்போது பாம்பு மூலமும் மின்தடை ஏற்படும் என்பது நிரூபணம் ஆகியுள்ளது. ஜப்பான் ஊடகங்களில் இந்த செய்தி மிக மிக பெரிய விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது.