338 அடி.. ஆஸி. காட்டுத்தீயை அணைக்க போராடும் வீரர்களுக்காக வித்தியாசமாக யோசித்த ஹோட்டல்!
சிட்னி: ஆஸ்திரேலிய காட்டுத்தீக்கு எதிராக போராடும் தீயணைப்பு வீரர்களுக்கு நிதி திரட்டுவதற்காக 338 அடி நீள பிராமண்ட பீட்சா உருவாக்கப்பட்டுள்ளது.
ஆஸ்திரேலியாவில் வரலாறு காணாத வெயில் வாட்டி வதைத்து வருகிறது. இதனால் பல இடங்களில் காட்டுத்தீ ஏற்பட்டுள்ளது. இதையணைக்க தீயணைப்பு வீரர்கள் கடுமையாக போராடி வருகின்றனர்.
உலகம் முழுவதிலுமிருந்து பல்வேறு தரப்பினரும் ஆஸ்திரேலிய தீயணைப்பு வீரர்களுக்கு உதவிக்கரம் நீட்டி வருகின்றனர். அந்த வகையில் ஆஸ்திரேலியாவில் இயங்கி வரும், இத்தாலி உணவகம் ஒன்று வித்தியாசமாக நிதி திரட்டும் முயற்சியில் ஈடுபட்டது.
சிட்னி நகரத்தில் அமைந்துள்ள பெல்லெக்ரினி (Pellegrini) என்ற இத்தாலியன் உணவகம் தான் இந்த வித்தியாச முயற்சியை மேற்கொண்டது. 90 கிலோ மாவு, 5 மணி நேர சமையல், 50 ஊயழியர்களின் உழைப்பில் 338 அடி, அதாவது 103 மீட்டர் நீளம் கொண்ட பிரமாண்ட பீட்சா உருவாக்கப்பட்டது.
சான் மர்சானோ தக்காளி, சீஸ், துளசி, உப்பு மற்றும் ஆலிவ் எண்ணெய் கொண்டு தயாரிக்கப்பட்ட இந்த பிரமாண்ட மார்கரீட்டா பீட்சா, 400 கிலோ எடைக்கொண்டது. சுமார் 4 ஆயிரம் துண்டுகளாக இந்த பீட்சா வெட்டப்பட்டு விற்கப்பட்டது. 3 ஆயிரத்துக்கும் அதிகமானோர் இந்த பீட்சாவை வாங்கிக் சென்று ஆஸ்திரேலிய தீயணைப்பு வீரர்களுக்கு உதவ முன்வந்தனர். இதில் கிடைத்த நிதி தீயணைப்புத்துறைக்கு நன்கொடையாக வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.