ஒரு குறளுக்கு ஒரு டாலர்.. அமெரிக்காவில் பத்தாவது ஆண்டாக திருக்குறள் போட்டி.. சிறப்புக் கருத்தரங்கம்
டல்லாஸ்(யு.எஸ்): அமெரிக்காவில் குழந்தைகளை ஊக்கப்படுத்தும் வகையில், ஒரு திருக்குறள் சொன்னால் ஒரு டாலர் பரிசு என்ற புதுமையான பரிசுத் திட்டத்துடன் ஆரம்பிக்கப்பட்ட திருக்குறள் போட்டி பத்தாவது ஆண்டை எட்டியுள்ளது.
சாஸ்தா தமிழ் அறக்கட்டளையின் சார்பில் நடைபெறும் இந்த பத்தாவது ஆண்டு திருக்குறள் போட்டி ஜனவரி 28ம் தேதி, ஃப்ரிஸ்கோ டிம்பர் ரிட்ஜ் மாண்டசெரி பள்ளி வளாகத்தில் நடைபெறுகிறது.
ஒரு வயது முதல் 17 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு வயது வாரியாக நான்கு பிரிவுகள் உள்ளன. குழந்தைகள் அனைவருக்கும் , பொருளுடன் கூறும் ஒவ்வொரு திருக்குறளுக்கும் ஒரு டாலர் பரிசு உண்டு. மேலும் பங்கு பெற்றதற்கான சான்றிதழ் மற்றும் பதக்கம் உண்டு.
18வயதுக்கு மேற்பட்டவர்களுக்கான பிரிவில் நடைபெறும் போட்டி மூலம் பெரியவர்களுக்கும் திருக்குறள் மீது ஆர்வம் அதிகரித்துள்ளது.
பெரியவர்கள் பிரிவில் 2014ம் ஆண்டு கீதா அருணாச்சலம் அமெரிக்காவிலேயே முதல்
போட்டியாளராக 1330 குறள்களையும் கூறி சாதனை படைத்தார். கடந்த ஆண்டு முனைவர் சித்ரா மகேஷூம் டல்லாஸில் நடந்த போட்டியில் 1330 குறள்களையும் சொல்லி வெற்றி பெற்றார்.
இந்த ஆண்டும் குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் பிரிவில் ஏராளமானோர் பதிவு செய்து வருவதாக தெரிகிறது. போட்டியில் பங்கேற்க ஜனவரி 25ம் தேதிக்குள் பதிவு செய்ய வேண்டும்.
மேலும் திருக்குறள் சார்ந்த பேச்சுப்போட்டி, கட்டுரைப் போட்டிகளும் அனைத்துப் பிரிவினர்களுக்கும் உண்டு. புதிதாக பொருட்காட்சி போட்டி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
திருக்குறளை மையமாகக் கொண்டு அறிவியல் கண்காட்சிபோல், வடிவமைத்து அரங்கத்தில் காட்சிக்கு வைக்க வேண்டும்.
பத்தாவது ஆண்டு சிறப்பு கருத்தரங்கம்
திருக்குறள் போட்டியின் பத்தாவது ஆண்டை கொண்டாடும் வகையில் சனிக்கிழமை பிப்ரவரி 11ம் தேதி காலை ஃப்ரிஸ்கோ டிம்பர் ரிட்ஜ் மாண்டசெரி பள்ளி வளாகத்தில் திருக்குறள் சார்ந்த சிறப்பு கருத்தரங்கத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
சான் ஃப்ரான்சிஸ்கோவிலிருந்து விழுதுகள் பத்திரிக்கை ஆசிரியர் நா. உதயபாஸ்கர் 'இறை' என்ற தலைப்பில் உறையாற்றுகிறார்.
ஹூஸ்டனிலிருந்து வருகை தரும் வாராந்திர திருக்குறள் திறனாய்வு குழுவின் ஒருங்கிணைப்பாளர் கரு மலர்ச்செல்வன் 'காமத்துப்பால் ஒரு காதல் காவியம்' என்ற தலைப்பில் பேச உள்ளார்.
இவர்களுடன், மலேசியாவில் பிறந்து வளர்ந்து ஜெர்மனியில் வசித்து வரும், தமிழ் மரபு அறக்கட்டளையின் நிறுவனர், தலைவர் டாக்டர் க.சுபாஷினியும் பங்கேற்க உள்ளார். அவர் 'அயல் நாட்டில் திருக்குறள்' என்ற தலைப்பில் சொற்பொழிவு ஆற்ற உள்ளார்.
நிகழ்ச்சியின் இறுதியாக பார்வையாளர்களுடன் கலந்துரையாடல், கேள்வி நேரமும் உண்டு. அன்று காலை குழந்தைகள் மற்றும் பெரியவர்களுக்கான பேச்சுப்போட்டியும் நடைபெற உள்ளது.
மாலை 4:30 மணி அளவில் ஃப்ரிஸ்கோ சென்டினியல் உயர் நிலைப் பள்ளி வளாகத்தில் தமிழ் ஆராதனை விழா நடைபெறும். திருக்குறள், கட்டுரை மற்றும் பேச்சுப் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளும் இந்த விழாவில் வழங்கப்படுகிறது. மேலும் தகவல்களுக்கு http://stfnonprofit.org/ இணைய தளத்தில் தெரிந்து கொள்ளலாம்.
ஒரு குறள் ஒரு டாலர் பரிசுப் போட்டி பற்றிய செய்தியை முதன் முதலாக 2012ம் ஆண்டு ஒன் இந்தியா தமிழ் இணைய தளத்தில் வெளியிட்டோம். அதைத் தொடர்ந்து பல்வேறு தரப்பினரும் சாஸ்தா தமிழ் அறக்கட்டளையை தொடர்பு கொண்டு போட்டி பற்றிய விவரங்களையும், போட்டி விதிமுறை களையும் கேட்டறிந்ததாக தெரிவித்தனர்.
தற்போது அமெரிக்கா மற்றும் கனடாவில் பரவலாக பல ஊர்களில் 'ஒரு குறள் ஒரு டாலர்' நடைபெற்று வருவது குறிப்பிடத் தக்கதாகும்.
- இர தினகர்