ஆப்கானிஸ்தானில் அரசியல் தலைவரின் வீட்டில் தற்கொலைப்படை தாக்குதல்: 11 பேர் பலி
ஜலாலாபாத்: ஆப்கானிஸ்தானில் உள்ள ஜலாலாபாத் நகரில் இருக்கும் உள்ளூர் அரசியல் தலைவரின் வீட்டு வளாகத்தில் நடந்த தற்கொலைப்படை தாக்குதலில் 11 பேர் பலியாகினர், 20 பேர் காயம் அடைந்தனர்.
ஆப்கானிஸ்தானின் நன்கர்ஹார் மாகாண தலைநகரான ஜலாலாபாத்தில் உள்ளது மாகாண கவுன்சில் உறுப்பினரான உபைதுல்லா ஷின்வாரியின் வீடு. இன்று அவரது வீட்டு வளாகத்தில் உள்ள விருந்தினர் மாளிகையில் பழங்குடியின தலைவர்களின் கூட்டம் நடந்தது.
அப்போது காலை 10.30 மணி அளவில் தற்கொலைப்படை தீவிரவாதி ஒருவன் உபைதுல்லாவின் வீட்டு வளாகத்திற்குள் புகுந்தார். அவர் தனது உடலில் கட்டியிருந்த வெடிகுண்டுகளை வெடிக்கச் செய்தார்.
இதில் 11 பேர் பலியாகினர், 20 பேர் காயம் அடைந்தார். உபைதுல்லா காயம் எதுவும் இன்றி உயிர் தப்பினார். உபைதுல்லாவின் வீடு பாகிஸ்தான் தூதரகத்திற்கு அருகில் உள்ளது. கடந்த வாரம் தான் பாகிஸ்தான் தூதரகத்தை ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் தாக்கினர் என்பது குறிப்பிடத்தக்கது.
பாகிஸ்தானின் பெஷாவரில் உள்ள ஆப்கானிஸ்தான் தூதரக அதிகாரியின் வீட்டில் தீவிரவாதிகள் துப்பாக்கிச்சூடு நடத்திய இரண்டு நாட்கள் கழித்து ஜலாலாபாத்தில் உபைதுல்லாவின் வீட்டில் தற்கொலைப்படை தாக்குதல் நடந்துள்ளது.