உலக அளவிலான போர்களில் 12,000 குழந்தைகள் பலி.. ஐ.நா அதிர்ச்சி ரிப்போர்ட்
ஜெனீவா: உலக அளவில் நடைபெற்ற போர்களில் 12 ஆயிரம் குழந்தைகள் இறந்துள்ளதாக ஐ.நா தெரிவித்துள்ளது.
மத்திய கிழக்கு நாடுகளில் கடந்த சில வருடங்களாகவே போர் மேகங்கள் சூழ்ந்து காணப்படுகிறது. இதனால் அங்குள்ள மக்கள் நிம்மதியின்றி தவித்து வருகின்றனர். குறிப்பாக ஏமன், மற்றும் சிரியா நாடுகளில் அரசுக்கும் கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே எப்போதும் போர் நடைபெற்று வருகிறது.
இதில் போராட்டக் காரர்கள் மட்டுமல்லாது பொதுமக்களும் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகிறார்கள். இதோடு பாலஸ்தீனம்-இஸ்ரேல் நாடுகளுக்கு இடையேயும் கடும் மோதல் நடந்து வருகிறது. காசா எல்லையில் தொடர்ந்து மோதல் நடைபெற்று வருகிறது.
இது தவிர அரசுப் படைகளுக்கும் தலிபான்களுக்கும் இடையே கடந்த 18 ஆண்டுகளுக்கு மேலாக கடும் போர் நடந்து வருகிறது. இதில் போராளிகள் மட்டுமல்லாது பொதுமக்களும் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகிறார்கள்.
போர் நடந்து வரும் இந்த நாடுகளில் கடந்த 2018ம் ஆண்டு நடைப்பெற்ற போர் மற்றும் உள்நாட்டு கலவரங்களில் பலியான குழந்தைகள் பற்றி ஐ.நா. ஆய்வு செய்துள்ளது. இந்த ஆய்வின்படி 'கடந்த 2018 ஆம் ஆண்டு மட்டும் சிரியா, ஏமன், ஆப்கானிஸ்தான், பாலஸ்தீனம் ஆகிய நாடுகளில் பலியான குழந்தைகளின் எண்ணிக்கை 12 ஆயிரத்தை தாண்டியுள்ளது.
இது ஒருபுறம் என்றால் குழந்தைகள் வேறு பல்வேறு விதங்களிலும் துன்புறுத்தப் படுகிறார்கள். பாலியல் ரீதியாக துன்புறுத்தல் மற்றும் பள்ளிகள், மருத்துவமனைகள் மீதான தாக்குதல்கள், குழந்தைகளை கடத்தி கிளர்ச்சியாளர்களாக பயன்படுத்துதல் போன்று எண்ணற்ற கொடுமைகளுக்கு குழந்தைகள் ஆளாக்கப்படுகிறார்கள் என்று ஐ.நா தெரிவித்துள்ளது.