யு.கே.: பள்ளி சிறுமியை 13 மாதங்களாக பலாத்காரம் செய்த 12 பேருக்கு 140 ஆண்டு சிறை
லண்டன்: இங்கிலாந்தில் பள்ளி சிறுமியை ஓராண்டுக்கும் மேலாக பாலியல் பலாத்காரம் செய்து வந்த 12 பேருக்கு 140 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து பிராட்போர்ட் கிரவுன் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
இங்கிலாந்தில் பள்ளி சிறுமி ஒருவரை 2011ம் ஆண்டு முதல் 2012ம் ஆண்டு வரை 12 பேர் பாலியல் பலாத்காரம் செய்து வந்துள்ளனர். வங்கதேசத்தை சேர்ந்த ஆரிப் சவுத்ரி(20) என்பவர் சிறுமிக்கு 13 வயது இருக்கையில் அவரை முதன்முதலாக சந்தித்துள்ளார்.
கீக்லீ பகுதியில் போதைப்பொருள் விற்பனை செய்ய அவர் சிறுமியின் உதவியை நாடியுள்ளார். முதலில் உதவி செய்த சிறுமி பின்னர் ஆரிபின் பேச்சை கேட்பதை நிறுத்துவிட்டு அவர் பற்றி போலீசில் புகார் அளித்தார்.
அந்த புகாரில் தான் ஆரிப் மற்றும் அவரது ஆட்கள் 11 பேர் அவரை 13 மாதங்களாக கார் பார்க்கிங், தேவாலயத்தில் உள்ள கல்லறை உள்பட பல்வேறு இடங்களில் வைத்து அவரை பாலியல் பலாத்காரம் செய்ததை தெரிவித்துள்ளார். ஆரிப் தன்னை அடித்து நொறுக்கி பலரை வைத்து பலாத்காரம் செய்ய வைத்ததையும் அவர் தனது புகாரில் குறிப்பிட்டுள்ளார்.
கார் பார்க்கிங்கில் வைத்து சிறுமியை 5 பேர் வரிசையாக பலாத்காரம் செய்துள்ளனர். அவரை பலாத்காரம் செய்த அனைவரும் தெற்காசியாவைச் சேர்ந்தவர்கள். இந்த வழக்கு பிராட்போர்ட் கிரவுன் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.
வழக்கை விசாரித்த நீதிபதி 12 பேருக்கும் 140 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தார். நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடக்கையில் ஆரிப் சவுத்ரி மட்டும் வங்கதேசத்திற்கு தப்பியோடிவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.