உயிருக்கு பயந்து 1.20 லட்சம் தெற்கு சூடான் மக்கள் ஐ.நா. முகாம்களில் தஞ்சம்
ஜூபா: தெற்கு சூடான் கடந்த 2011-ம் ஆண்டு சூடானிலிருந்து பிரிந்து தனி நாடு என்ற அந்தஸ்தினைப் பெற்றது.
கடந்த வாரம் இந்த நாட்டின் முன்னாள் துணை அதிபர் ரீக் மச்சரால் தூண்டிவிடப்பட்ட அரசு எதிர்ப்புப் போராட்டம் தீவிரமடைந்துள்ளது.
இதனை முறியடிக்க அந்நாட்டின் அதிபர் சல்வார் கிர் மேற்கொண்ட முயற்சிகள் பலனளிக்கவில்லை.
நீடிக்கும் சண்டை
முன்னாள் துணை அதிபர் சதி முயற்சியின் மூலம் வன்முறையைத் தூண்டி விட்டு நாட்டை அழிக்கும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகின்றார் என்று அதிபர் சல்வார் கிர் குற்றம் சாட்டியுள்ளார்.
அந்நாட்டின் எண்ணெய் உற்பத்திப் பகுதிகளில் தொடர்ந்து சண்டை நீடித்து வருகின்றது. இந்த நிலையில் ஐக்கிய நாடுகளின் பாதுகாப்புப் படையினர் உதவிக்கு அழைக்கப்பட்டுள்ளனர்.
ஐ.நாவில் தஞ்சம்
இந்நிலையில், கடந்த 15-ம் தேதியில் இருந்து வன்முறைகள் அதிகரித்துள்ளதால் இதுவரை ஆயிரம்பேர் வரை கொல்லப்பட்டிருப்பதாக ஐ.நா. அறிவித்துள்ளது. இதுவரை சுமார் 1 லட்சத்து 20 ஆயிரம் பேர் உயிருக்கு பயந்து தங்களது வசிப்பிடங்களை விட்டு வெளியேறியுள்ளனர்.
அவர்களில் சரிபாதிக்கும் மேற்பட்ட மக்கள் தெற்கு சூடானில் உள்ள ஐக்கிய நாடுகள் சபையின் முகாம்களில் தங்கியுள்ளதாக ஐ.நா.சபை அறிவித்துள்ளது. இவர்களுக்கான அத்தியாவசிய தேவைகளை பூர்த்தி செய்வதற்காக 166 மில்லியன் அமெரிக்க டாலர்கள் தேவைப்படுவதாகவும் ஐ.நா.தெரிவித்துள்ளது.
எண்ணெய் வளம்
நாட்டின் எண்ணெய் வளம் மிக்க பகுதிகளான யூனிட்டி மற்றும் அப்பர் நைல் ஸ்டேட் பகுதிகளில் உள்ள நகரங்களிலிருந்து புரட்சியாளர்களை விரட்டும் முயற்சியில் அரசு தொடர்ந்து ஈடுபட்டுள்ளது. எண்ணெய் வளமிக்க நகரினை வன்முறையாளர்கள் கைப்பற்றினால் அமைதியின்மையும் நாட்டின் உயிர் நாடியான பொருளாதார வளத்தைப் பாதித்து விடக்கூடும் என்ற அச்சமே அதற்குக் காரணம்.
ஆப்பிரிக்கத் தலைவர்கள்
இந்த நிலையில் இந்த இரு தலைவர்களுக்குமிடையே பேச்சுவார்த்தை மூலம் சமரசம் ஏற்படுத்தும் எண்ணத்துடன் ஆப்பிரிக்கத் தலைவர்கள் தெற்கு சூடானுக்கு வந்துள்ளனர்.
கென்யா அதிபர் உரு கென்யாட்டாவும், எதியோப்பியாவின் பிரதமர் ஹைலேமரியம் டஸ்லெகனும் அதிபர் சல்வார் கிர்ரை வியாழனன்று சந்தித்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.
மாயமான அதிபர்
இருப்பினும், முன்னாள் துணை அதிபர் தனது கிளர்ச்சியைக் கைவிட்டால்தான் அரசு அவருடன் பேச்சுவார்த்தையில் ஈடுபடுவோம் என்று மூத்த அரசு அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
முன்னாள் துணை அதிபர் ரீக் மச்சருடன் தங்களது அரசு இன்னும் முறையாகத் தொடர்பு கொள்ளவில்லை என்று கூறிய தகவல் தொடர்பு அமைச்சரான மைக்கேல் மக்யுயி லியுத், தாங்கள் அவருடன் பேசப்போவதில்லை என்றும் கூறினார்.
மச்சரின் தொலைபேசி எண்கள் அனைத்தும் அணைக்கப்பட்டுள்ளன. அவருடைய இருப்பிடமும் யாருக்கும் தெரியவில்லை என்று கூறப்படுகின்றது.