சட்டவிரோதமாக தங்கியிருந்ததாக குற்றச்சாட்டு.. மலேசியாவில் 126 வெளிநாட்டு தொழிலாளர்கள் கைது
கோலாலம்பூர்: மலேசியாவில் பல்வேறு இடங்களில் நடத்தப்பட்ட சோதனையில் 126 வெளிநாட்டுத் தொழிலாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் சட்டவிரோதமாக தங்கியிருந்த 126 வெளிநாட்டுத் தொழிலாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதில் இந்தோனேசியா, வங்கதேசம், நேபாளம் உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த 97 ஆண்களும் 29 பெண்களும் சிறைப்படுத்தப்பட்டுள்ளனர்.
கடந்த வார இறுதியில், ஐந்து வெவ்வேறு இடங்களில் நடத்தப்பட்ட இச்சோதனை தொடர்பாக பேசியுள்ள கோலாலம்பூர் குடிவரவுத்துறையின் இயக்குனர் ஹமிதி ஏடம், "ஆப்ரேஷன் சபூ என்ற இச்சோதனையில் 55 குடிவரவுத்துறை அதிகாரிகள் ஈடுபட்டனர். 226 தனிநபர்கள் பரிசோதிக்கப்பட்டதில் 126 பேர் சிறைப்படுத்தப்பட்டுள்ளனர்" எனக் கூறியுள்ளார்.
இந்த சோதனையில் கைது செய்யப்பட்ட வெளிநாட்டுத் தொழிலாளர்கள் மீது முறையான ஆவணங்களின்றி பயணித்தது, விசா காலம் முடிந்தும் தங்கியிருத்தல், போலியான ஆவணங்களை பயன்படுத்தல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதியப்பட்டுள்ளது.
[ புதுத்தாலி.. பட்டுப்புடவை.. வேறு ஒரு இளைஞருடன் மனைவி.. அதிர்ந்த கணவன்!! ]
வெளிநாடுகளிலிருந்து சட்டவிரோதமாக மலேசியாவிற்குள் நுழைந்தோ அனுமதி காலத்தை கடந்தோ வேலை செய்யும் வெளிநாட்டுத் தொழிலாளர்களை 'சட்டவிரோத குடியேறிகள்' என அடையாளப்படுத்துகின்றது மலேசிய அரசு.