ஒருநாளில் இத்தனை மரணங்களா... உணவின்றி இறக்கும் குழந்தைகள்... சவூதி- ஏமன் போரால் நடக்கும் கொடுமை
ஏமனுக்கும் சவூதி அரேபியாவுக்கும் இடையில் போர் தொடங்கி இருப்பதால் தினமும் கிட்டத்தட்ட 130 குழந்தைகள் மரணம் அடைவதாக கணக்கெடுப்பு கூறி இருக்கிறது.
Recommended Video
ரியாத்: ஏமனுக்கும் சவூதி அரேபியாவுக்கும் இடையில் கடந்த சில நாட்களாக சிறிய அளவில் போர் நடந்து வருகிறது. இதனால் இருநாட்டிலும் இருக்கும் பல லட்சம் மக்கள் தங்கள் இருப்பிடத்தை காலி செய்து வருகின்றனர். தினமும் கிட்டத்தட்ட 130 குழந்தைகள் இதனால் மரணம் அடைவதாக கணக்கெடுப்பு வெளியாகி இருக்கிறது.
இந்த போர் தற்போது சவூதிக்கும், லெபனானுக்கும் இடையில் வேறு பிரச்சனையை உருவாக்கி இருக்கிறது. இதில் தற்போது ஈராக் நாடும் தனது பலத்தை காட்ட துடித்துக் கொண்டு இருக்கிறது.
ஷியா, சன்னி முஸ்லீம் பிரச்சனை தான் இந்த நான்கு நாடுகளுக்கு இடையில் பிரிவை உண்டாக்கி இருக்கிறது. சரியாக சொல்ல வேண்டும் என்றால் சவூதிக்கு எதிராக ஈராக், ஏமன், லெபனான் கூட்டு சேர்ந்து உள்ளது.
எப்படி பிரச்சனை தொடங்கியது
ஏமனுக்கும், சவூதி அரேபியாவுக்கும் இடையில் கடந்த ஒரு மாதமாக சிறிய அளவில் போர் நடந்து வருகிறது. இதற்கு முதற்காரணம் சன்னி, ஷியா முஸ்லீம் பிரச்சனைதான். முதலில் ஈராக்கிற்கும், சவுதிக்கும் இடையில்தான் பிரச்சனை தொடங்கியது. சவூதி சன்னி நாடு அதை எதிர்க்கும் மற்ற மூன்று நாடுகளும் ஷியா மக்களால் நிரம்பி இருக்கிறது. இவர்களுக்கு இடையில் இருக்கும் வேறுபாடு தற்போது போராக மாறி இருக்கிறது.
சவூதி மீதான தாக்குதல்
இந்த மாத தொடக்கத்தில் தான் இந்த போர் பிரச்சனை விஸ்வரூபம் எடுத்தது. சவூதி மீது லெபனான் போர் அறிவித்தது. ஈராக் தாக்குதல் நடத்துவேன் என்றது. ஏமன் ஒருபடி மேல் போய் ரியாத்தில் தன்னுடைய தாக்குதலை நடத்தியது. சவூதி இதற்கு உடனடியாக பதிலடி கொடுத்ததோடு, தன்நாட்டு ஷியா மக்களை உடனடியாக வெளியேறும்படி ஆணை இட்டுள்ளது.
ஏமனின் புரட்சி இயக்கம்
ஈராக், லெபனான் போன்ற நாடுகளில் சவூதியை எதிர்ப்பதற்காக அரசாங்கம் மட்டும் இல்லாமல் தனியாக சில இயக்கங்களும் இருக்கிறது. பெரும்பாலும் இந்த இயக்கங்கள் அந்நாட்டு அரசை விட வலிமை பொருந்தியதாகவே உள்ளது. அதன்படி ஏமனிலும் 'ஏமன் புரட்சிப் படை' என்று ஷியா இயக்கம் இருக்கிறது. அந்த இயக்கம் தான் சில நாளுக்கு முன் சவூதியில் தாக்குதல் நடத்தி போருக்கு பிள்ளையார் சுழி போட்டது.
ஐநா வெளியிட்ட அறிக்கை
இந்த பிரச்சனை இந்த மாதம் பூதாகாரமாகி இருந்தாலும் இந்த வருட தொடக்கத்தில் இருந்தே புகைந்து கொண்டுதான் இருந்தது. இதனால் இந்த ஒரு வருடத்தில் மட்டும் இரண்டு நாடுகளில் இருந்தும் 20 மில்லியன் மக்கள் வெளியேறி உள்ளனர். அதில் 11 மில்லியன் குழந்தைகள் அடக்கம். 1,00,000 பேர் அதிகாரப்பூர்வமாக மரணம் அடைந்துள்ளதாக கணக்குகள் தெரிவிக்கிறது.
கொஞ்சம் கூட உணவு இல்லை
இந்த போர் காரணமாக 7 லட்சம் பேர் உணவு இல்லாமல் தவித்து வருகின்றனர். தினமும் இதன் காரணமாக 130 குழந்தைகள் மரணம் அடைகின்றனர். இந்த ஒரு வருடத்தில் மட்டும் 50,000 குழந்தைகள் இதனால் இறந்துள்ளனர். ஆனால் இன்னும் அங்கு முழுவீச்சில் போர் தொடங்கவில்லை என்பதே இதில் மிகவும் சோகமான விஷயம். ஐநா சபை அங்கு நடக்கும் நிகழ்வுகளை கட்டுப்படுத்த முடியாமல் சிரமப்பட்டு வருகிறது.