பொலிவியாவில் கொட்டித் தீர்த்த கனமழை... நிலச்சரிவில் சிக்கி 14 பேர் பலி
லா பாஸ்: தென் அமெரிக்க நாடான பொலிவியாவில் கனமழையால் மலைப்பகுதியில் இரண்டு இடங்களில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 14 பேர் உயிரிழந்தனர்.
பொலிவியாவில் பல்வேறு இடங்களில் கனமழை பெய்து வருகிறது. தலைநகர் லா பாஸ்சின் வடக்கு பகுதியில் உள்ளது கார்னவி நகரம். இது அமேசான் மழைகாடுகளுக்கான நுழைவு வாயிலாகும்.
இங்கு, கனமழையால் முக்கிய நெடுஞ்சாலை மற்றும் அதன் ஒட்டிய மலைப்பகுதியும் மிகவும் ஈரமானதால், திடீரென சரிந்து விழுந்தது.
இரண்டு இடங்களில் நிகழ்ந்த நிலச்சரிவு காரணமாக கார்னவி நகர சாலையில் சென்று கொண்டிருந்த வாகனங்கள் சிக்கிக் கொண்டன.இதில், 14 பேர் உயிரிழந்ததாகவும், 34 பேர் காயமடைந்து உள்ளதாகவும் பொலிவியா போலீஸ் தலைமை அதிகாரி ரோமுட்டோ டெல்காடா தெரிவித்தார். மேலும் கனமழையில் அடித்துச் செல்லப்பட்டவர்களை தேடும் பணி முழுவீச்சில் நடைபெறுவதாகவும் அவர் கூறினார்.
பொலிவியா அதிபர் மோரலஸ், மக்கள் பாதுகாப்பான இடங்களில் இருக்கும்படி அறிவுறுத்தியுள்ளார். அவசர கால சூழலுக்கு விமானங்கள் பயன்படுத்தப்படும் என்றும் அதிபர் கூறியுள்ளார். பொலிவியாவில் நவம்பர் முதல் மார்ச் வரை மழைக்காலம் ஆகும். ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதங்களில் மிகுந்த கனமழை பெய்யும் என்பது குறிப்பிடத்தக்கது.