ஐ.எஸ். தீவிரவாதிகள் அட்டூழியம்! ஏமனில் தற்கொலைப்படை தாக்குதலில் ராணுவ வீரர்கள் 14 பேர் பலி
ஏடன்: அரபு நாடுகளில் ஒன்றான ஏமனில் இன்று நிகழ்ந்த தற்கொலைப்படை தாக்குதலில் 14 ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர். இந்த தாக்கதலுக்கு ஐ.எஸ்.தீவிரவாதிகள் பொறுப்பேற்றுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஏமனில் அதிபர் அபத் ரப்போ மன்சூர் ஹாதியின் ஆட்சிக்கு எதிராக ஹவுத்தி கிளர்ச்சியாளர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். அதிபருக்கு ஆதரவாக சவுதி தலைமையிலான கூட்டு படையும் முகாமிட்டு கிளர்ச்சியாளர்கள் மீது விமான தாக்குதல் நடத்தி வருகிறது.
இதனிடையே ஐ.எஸ். தீவிரவாத அமைப்பும், அல்கொய்தா ஆகிய அமைப்புகள் அவ்வப்போது தாக்குதலில் ஈடுபட்டு வருகின்றனர். தொடர்ந்து இவர்களின் அட்டூழியங்கள் ஏமனில் அதிகரித்து வருகிறது.
கடந்த மாதம் ஆளுநர் அய்தரஸ் அல்-ஜூபாய்தியை குறி வைத்து அவரது பாதுகாப்பிற்காக நின்று கொண்டிருந்த பாதுகாப்பு படையினர் மீது இந்த தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் 8 பேர் பலியாகினர். இந்தத் தாக்குதலுக்கு ஐ.எஸ் தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்றது.
இந்நிலையில், ஏடனில் உள்ள ராஸ் அப்பாஸ் முகாமில் இன்று ராணுவ வீரர்கள் பயிற்சியில் ஈடுபட்டனர். அப்போது, அங்கு ராணுவ சீருடையில் வந்த ஒரு நபர், தனது உடையில் மறைத்து வைத்திருந்த வெடிகுண்டை வெடிக்கச் செய்துள்ளான். இதில், 14 பேர் உடல் சிதறி பலியாகினர். பலர் காயமடைந்தனர். இந்த தாக்குதலுக்கு ஐ.எஸ். அமைப்பு பொறுப்பேற்றுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
ஏமனில் ராணுவ முகாம்களை குறிவைத்து ஐ.எஸ்.தீவிரவாதிகள் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.