இந்தப் பையனோட மூக்கை 3 விநாடி உத்துப் பாருங்களேன்.. எஸ்.. இதுதான் அமெரிக்காவின் முதல் "3டி நோஸ்"!
நியூயார்க்: அமெரிக்காவைச் சேர்ந்த 14 வயது சிறுவனுக்கு 3டி தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி செயற்கை மூக்கைப் பொருத்தி மருத்துவர்கள் சாதனை படைத்துள்ளனர்.
செயற்கையாக மூக்கைப் பொருத்துவது முதல் முறையல்ல என்றாலும் கூட முதல் முறையாக 3டி தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி இதைச் சாதித்துள்ளனர் அமெரிக்க டாக்டர்கள்.
இந்த சிறுவனது பெயர் டேலன் ஜென்னட். மார்ஷல்ஸ் தீவு என்று குட்டி தீவு நாட்டைச் சேர்ந்தவன். 9 வயதான போது ஒருநாள், விளையாடிக் கொண்டிருந்தபோது ஜென்னட் எதிர்பாராதவிதமாக மின்சார வயரில் விழுந்தான். இதில் அவனது முகம் சிதைந்து போனது. மூக்கும் பொசுங்கிப் போனது.
அது முதலே அவனது முகம் சிதைந்த நிலையில்தான் இருந்து வந்தது. இந்த நிலையில்தான் நியூயார்க் வந்தனர் அவனது குடும்பத்தினர். அங்குள்ள மெளன்ட் சினாய் கண் காது மருத்துவமநையில் ஆலோசநை நடத்திய பின்னர் அறுவைச் சிகிச்சை செய்யப்பட்டது. தற்போது அறுவைச் சிகிச்சை மூலம் புதிய மூக்கைப் பெற்று புது வாழ்வும் பெற்றுள்ளான் இச்சிறுவன்.
இந்த அறுவைச் சிகிச்சையின் ஒரு கட்டமாக முதலில் ஜேனட்டின் குடும்பத்தினரின் மூக்குகளை அளவெடுத்து 3டி முறையில் செயற்கையாக உருவாக்கி அதை சிறுவனக்குப் பொருத்தினர் டாக்டர்கள். 16 மணி நேரம் இந்த அறுவைச் சிகிச்சை நடந்தது குறிப்பிடத்தக்கது.
இதுவரை பாதிக்கப்பட்ட மூக்கை அகற்றி விட்டு புதிய மூக்கைப் பொருத்துவது என்பது மிகப் பெரிய அளவில் வெற்றிகரமாக இருந்ததில்லை. ஆனால் முதல் முறையாக 3டி தொழில்நுட்பம் மூலம் மிகச் சரியான முறையில் செயற்கை மூக்கைப் பொருத்தியுள்ளனர் அமெரிக்க டாக்டர்கள்.
தற்போது எல்லோரையும் போலவே இயல்பான முறையில் சிறுவனால் நுகர முடியும், வாசனை பிடிக்க முடியும். ஜேனட்டுக்கான மருத்துவ சிகிச்சைக்கான செலவை கலிபோர்னியாவைச் சேர்ந்த பெனிசியா என்ற நிறுவனம் ஏற்றுக் கொண்டது குறிப்பிடத்தக்கது.