இருளில் மூழ்கிய வெனிசுலா.. டயாலிசிஸ் செய்ய முடியாமல் 15 சிறுநீரக நோயாளிகள் பலியான பரிதாபம்
வெனிசுலாவில் கடும் மின் தட்டுப்பாடு காரணமாக டயாலிசிஸ் செய்ய முடியாமல் 15 சிறுநீரக நோயாளிகள் பலியாகியுள்ளனர்.
கராகஸ்: அரசியல் பிரச்சினையால் கடும் மின் தட்டுப்பாட்டில் தவித்து வரும் வெனிசுலாவில், உரிய நேரத்தில் டயாலிசிஸ் செய்ய முடியாததால் 15 நோயாளிகள் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
தென் அமெரிக்க நாடான வெனிசுலா, எண்ணெய் வளம் மிக்க நாடு. தற்போது அந்நாட்டின் அதிபராக இருக்கும் நிகோலஸ் மதுரோ மீது மக்களுக்கு அதிருப்தி ஏற்பட்டுள்ளது. அவர் அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற போதே, எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்புக்கு மத்தியில் தான் பதவியேற்றார். தேர்தலில் முறைகேடுகள் நடந்ததாக, எதிர்க்கட்சிகள் தொடர்ந்து குற்றம் சாட்டின.
இந்நிலையில் அங்கு தற்போது அரசியல் மோதல் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது. எதிர்க்கட்சி தலைவர் ஜுயான் கொய்டோ தன்னை அந்நாட்டின் இடைக்கால அதிபராக அறிவித்து கொண்டார். அவருக்கு அமெரிக்கா உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட நாடுகள் தங்களது ஆதரவை தெரிவித்துள்ளன.
இதனால் வெனிசுலாவில் அரசியல் குழப்பமான சூழல் நிலவுகிறது. அந்நாட்டின் மீது அமெரிக்கா பொருளாதாரத் தடையும் விதித்துள்ளதால், அத்தியாவசிய பொருட்கள் தட்டுப்பாடும், கடும் மின் தட்டுப்பாடும் அங்கு நிலவுகிறது.
அந்நாட்டின் மேற்கு மாகாணங்களான பரினாஸ், தசீரா, ஷூலியா உள்ளிட்ட பகுதிகள் மின்சாரம் இல்லாததால், இருளில் மூழ்கிக் கிடக்கின்றன. கராகஸ், மிராண்டா, வர்காஸ் ஆகிய மாகாணங்களில் மின்சாரம் விட்டுவிட்டு வருகிறது. மின் தட்டுப்பாட்டின் காரணமாக அங்குள்ள சர்வதேச விமான நிலையங்கள், உள்ளூர் மெயின் விமான நிலையங்கள் போன்றவையும் பாதிக்கப்பட்டுள்ளன. பொதுமக்களும் இயல்பு வாழ்க்கை வாழ இயலாமல் பெரும் அவதிப்பட்டு வருகின்றனர்.
இந்த கடும் மின் தட்டுப்பாட்டினால் அங்குள்ள மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ள நோயாளிகளும் பெரும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். இதுவரை டயாலிசிஸ் சிகிச்சை பெற முடியாமல் சுமார் 15க்கும் மேற்பட்ட சிறுநீரக நோயாளிகள் உயிரிழந்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
மேலும், அங்கு சுமார் 10,200-க்கும் மேற்பட்ட சிறுநீரக நோயாளிகள் டயாலிசிஸ் சிகிச்சை பெற்று வருவதால், மின் தட்டுப்பாட்டினால் அவர்கள் உயிருக்கும் ஆபத்து ஏற்படும் சூழல் உருவாகி உள்ளது குறிப்பிடத்தக்கது.