கப்பல் கவிழ்ந்து 150 பேர் பலி.. லிபியாவில் நடந்த மிகப் பெரிய உயிரிழப்பு.. மக்கள் சோகம்
ரோம்: லிபியாவிலிருந்து ஐரோப்பாவுக்குள் செல்லும் கப்பலில் பயணம் செய்த 150 பேர் மூழ்கி உயிரிழந்தனர்.
லிபியாவிலிருந்து தெற்கு இத்தாலிக்கு இடம்பெயர்வதற்காக ஒரு கப்பலில் 100-க்கும் மேற்பட்டோர் சென்று கொண்டிருந்தனர். அப்போது மேற்கு லிபியாவில் அல் கோம்ஸ் என்ற இடத்தில் கப்பல் கவிழ்ந்து ஏராளமானோர் நீரில் மூழ்கினர்.
இதையடுத்து தகவலறிந்த மீட்புக் குழுவினர், லிபியா கடலோர காவல் படையினர் சம்பவ இடத்துக்கு வந்தனர். அங்கு மீட்பு பணிகளில் ஈடுபட்டனர். இதில் 150 பேர் பலியாகிவிட்டனர்.
மேலும் 140 பேரை உள்ளூர் மீனவர்கள் உயிருடன் மீட்டனர். இவர்கள் அனைவரும் ஒரே கப்பலில் பயணம் செய்தனரா இல்லை வெவ்வேறு கப்பல்களில் பயணம் செய்தவர்களா என தெரியவில்லை. சட்டவிரோதமாக குடியேறுபவர்களே இது போல் கப்பல்களில் வந்து உயிரிழப்பை சந்திக்கின்றனர்.
இந்த நிலையில் இந்த மாத தொடக்கத்தில் இதுபோல் சட்டவிரோதமாக புலம்பெயர்பவர்களை அழைத்து வரும் கப்பல்களை பறிமுதல் செய்ய அந்நாட்டு அரசு மசோதாவை நிறைவேற்றியது. ஒரே நேரத்தில் இத்தனை பேர் உயிரிழந்துள்ளது பெரிய விபத்தாகும் என அதிகாரிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.
இந்த விபத்துக்கு முன்னர் இந்த ஆண்டு ஜூலை 21 வரை மத்திய மெடிடரேனியன் கடலில் இருந்து இத்தாலிக்கு இடம்பெயருபவர்களில் இது 423 பேர் பலியாகியுள்ளனர் என தகவல்கள் கூறுகின்றன.