அமெரிக்க இரட்டை கோபுரம் தகர்க்கப்பட்டதன் 15வது நினைவு தினம்.. இன்று!
வாஷிங்டன்: 9/11 என்று சொல்லப்படும் அமெரிக்காவின் இரட்டை கோபுர தாக்குதல் தினத்தின் 15வது ஆண்டு இன்று அனுஷ்டிக்கப்படுகிறது.
அமெரிக்காவில் உள்ள நியூயார்க் நகரில் கடந்த 2001ம் ஆண்டு இதே நாளில் உலக வர்த்தக மையத்தின் இரட்டை கோபுர கட்டடங்களை விமானம் மூலம் மோதி தகர்த்தனர் அல் கொய்தா தீவிரவாதிகள். ஒசாமா பின்லேடன் தலைமையில் இயங்கிய அல்கொய்தா அமைப்பு நடத்திய இந்த பயங்கர தாக்குதலில் சுமார் 2,753 பேர் பலியானார்கள்.
அமெரிக்காவின் இதயத்திற்குள் புகுந்து தீவிரவாதிகள் நடத்திய அந்த முதல் பெரும் தாக்குதல் அமெரிக்கர்களை அதிர வைத்தது. அலறடித்தது.
அந்த கொடூரமான சம்பவத்தின் 15வது நினைவு தினம் இன்று அனுஷ்டிக்கப்படுகிறது.
பேர்ல் துறைமுகம் தாக்குதல்
கடந்த 1941ம் ஆண்டு இரண்டாம் உலகப் போரின் போது, அமெரிக்காவின் பியர்ல் துறைமுகத்தை ஜப்பான் ராணுவம் குண்டு வீசி தாக்கியது. அப்போது அமெரிக்காவிற்கு அது பெரும் இழப்பை ஏற்படுத்தியது போல, இரட்டை கோபுர தாக்குதலும் பெரிய இழப்பையும் துயரத்தையும் ஏற்படுத்தியது. மேலும் இந்த சம்பவம் உலகத்தையே அதிர்ச்சியில் ஆழ்த்தியது.
சுற்றுலாத் தலமான நினைவிடம்
இரட்டை கோபுர தாக்குதல் நடைபெற்ற இடத்தில் தற்போது நினைவிடமும், மியூசியமும் அமைக்கப்பட்டுள்ளது. 5 ஆண்டுகளுக்கு முன் திறக்கப்பட்ட இந்த இடத்தைக் காண ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனர்.
வருந்தும் உறவினர்கள்
நியூயார்க் நகரின் சுற்றுலாத் தல பட்டியலில் இந்த நினைவிடமும் சேர்ந்துவிட்டது என்பதால் சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகமாகவே உள்ளது. பயணிகள் இங்கு வந்து மகிழ்ச்சிகரமாக செல்பிக்களைக் எடுத்துக் கொண்டு செல்கிறார்கள் என்று இறந்தவர்களின் உறவினர்கள் வருத்தம் தெரிவிக்கின்றனர்.
மக்கள் அஞ்சலி
ஆனால், பலியான பல்லாயிரக்கணக்கானோரின் உறவினர்கள் இந்த இடத்தை ஒரு துயரம் நிறைந்த இடமாகவே கருதுகின்றனர். ஆண்டிற்கு ஒரு முறை தாக்குதல் நடந்த செப்டம்பர் 11ம் தேதி இங்கு வந்து அஞ்சலி செலுத்திவிட்டு செல்கின்றனர்.
அமெரிக்காவின் தீவிர நடவடிக்கை
அந்தத் தாக்குதலுக்குப் பின்னர்தான் தீவிரவாதிகளுக்கு எதிரான தனது நடவடிக்கைகளை வேகப்படுத்தியது அமெரிக்கா. பல அமைப்புகளுக்குத் தடை விதித்தது. பின்லேடனை பிடிக்கவும் தீவிரம் காட்டியது. இதன் விளைவாக பாகிஸ்தானுக்குள் பதுங்கி வாழ்ந்து வந்த பின்லேடனை அமெரிக்க கடற்படையினர் அதிரடியாக வீடு புகுந்து சுட்டுக் கொன்று உடலையும் தூக்கிச் சென்று கடலில் புதைத்து விட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.