பிரான்சில் பெருக்கெடுத்து ஓடும் வெள்ளம்- இதுவரையில் 16 பேர் பரிதாப பலி
பாரிஸ்: ஐரோப்பாவின் பிரான்சில் வெள்ளத்தில் சிக்கி 16 பேர் உயிரிழந்துள்ளனர்.பிரான்சின் தென்கிழக்குப் பகுதியில் சில நாட்களாக பயங்கர சூறாவளியுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது.
இதில் கடலோர நகரமான கோட் டிஅசூர் வெள்ளக்காடாக மாறியுள்ளது. இங்குள்ள பிரேக் நதியில் பெருகிய காட்டாற்று வெள்ளம் திடீரென்று கரையை உடைத்துக் கொண்டு அருகே உள்ள ஆன்டிப்ஸ் நகருக்குள் புகுந்தது. இதில் ஏராளமான வீடுகள் மூழ்கின.
வெள்ளத்தில் மூழ்கிய முதியோர் இல்லம் ஒன்றில் மூத்த குடிமக்கள் மூன்று பேர் தப்பிக்க வழியின்றி பரிதாபமாக உயரிழந்தனர். குகைப் பாதை ஒன்றில் திடீரென புகுந்த வெள்ளத்தில் கார் மூழ்கியதில் அதில் இருந்த மூன்று பேர் உயிரிழந்தனர்.
உலக திரைப்பட விழா நடைபெறும் கேன்ஸ் நகரமும் வெள்ளத்தின் கோரப்பிடியில் சிக்கியது. இங்கு பல கார்கள் வெள்ளத்தில் மூழ்கி கடலுக்குள் இழுத்துச் செல்லப்பட்டன. சூறாவளியால் பல இடங்களில் மரங்கள் வேரோடு மண்ணில் சாய்ந்தன. தொலை தொடர்பு கோபுரங்களும், மின் கம்பங்களும் முறிந்து விழுந்தன.
இதனால் 35 ஆயிரத்திற்கும் அதிகமான வீடுகள் இருளில் மூழ்கின. விமான போக்குவரத்து நிறுத்தப்பட்டதால் நைஸ் விமான நிலையத்தில் ஐநுாறுக்கும் அதிகமான வெளிநாட்டு பயணிகள் வெளியேற முடியாமல் தவிக்கின்றனர். அந்த நகரில் நடைபெறவிருந்த முக்கிய கால்பந்து போட்டியும் வெள்ளம் காரணமாக ரத்து செய்யப்பட்டுள்ளது. இதுவரையில் இந்த இயற்கை சீற்றத்திற்கு 16 பேர் பலியாகியுள்ளனர்.