தாய்லாந்தில் பரிதாபம்: பள்ளி விடுதியில் தீ விபத்து- 17 மாணவிகள் உடல் கருகி பலி
பாங்காக்: தாய்லாந்தில் பள்ளி ஒன்றின் விடுதியில் தீ விபத்து ஏற்பட்டதில் 17 மாணவிகள் உடல் கருகி பலியாகியுள்ளனர்.
தாய்லாந்தின் சியாங் ராய் மாகாணத்தில் உள்ள வியாங் பா பாவ் மாவட்டத்தில் பிதாகியட்ர் வித்யா என்ற பள்ளி அமைந்துள்ளது. அந்த பள்ளியில் பழங்குடியினத்தை சேர்ந்த 6 முதல் 13 வயது வரையிலான மாணவிகள் படித்து வருகிறார்கள்.
பள்ளி வளாகத்தில் மாணவிகள் தங்கும் விடுதி உள்ளது. அந்த விடுதியில் 38 மாணவிகள் தங்கியிருந்தனர். இந்நிலையில் நேற்று இரவு திடீர் என விடுதில் தீ விபத்து ஏற்பட்டது. அப்போது விழித்திருந்த மாணவிகள் அலறியடித்துக் கொண்டு வெளியே ஓடி வந்ததால் தப்பித்துக் கொண்டனர்.
தூங்கிக் கொண்டிருந்த மாணவிகள் தீயில் சிக்கிக் கொண்டனர். இந்த விபத்தில் 17 மாணவிகள் உடல் கருகி பலியாகியுள்ளனர். 5 பேர் காயம் அடைந்துள்ளனர். மேலும் 2 மாணவிகளை காணவில்லை என்று போலீஸ் உயர் அதிகாரி பிரயாத் சிங்சின் தெரிவித்துள்ளார்.
தீயணைப்பு துறை வீரர்கள் போராடி தீயை அணைத்தனர். மீட்பு பணிகள் நேற்று இரவு முதல் இன்று காலை வரை நடந்தது. தாய்லாந்தின் மலைப்பகுதிகளில் வசிக்கும் பழங்குடியினத்தவர்கள் பெரும்பாலும் வறுமையில் வாடி வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.