ஐஎஸ் அமைப்பில் இருந்து தப்பியோட முயன்ற 17 வயது சிறுமியை அடித்தே கொன்ற தீவிரவாதிகள்
ராக்கா: ஐஎஸ்ஐஎஸ் விளம்பர போஸ்டர்களுக்கு போஸ் கொடுத்த 17 வயது ஆஸ்திரிய சிறுமி சிரியாவில் இருந்து தப்பிக்க முயற்சி செய்தபோது தீவிரவாதிகளால் அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ளார்.
ஆஸ்திரியாவைச் சேர்ந்த சம்ரா கெசினோவிச்(17) மற்றும் அவரது தோழி சபினா செலிமோவிச்(15) ஆகியோர் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் நாட்டை விட்டு வெளியேறி சிரியா சென்றனர். ஐஎஸ்ஐஎஸ் அமைப்பில் சேர்ந்து போராடப் போவதாக அவர்கள் கடிதம் எழுதி வைத்துவிட்டு கிளம்பினர்.
ராக்கா நகரை அடைந்த அவர்கள் ஐஎஸ்ஐஎஸ் அமைப்பில் சேர்ந்தனர்.
திருமணம்
சம்ரா மற்றும் சபினா ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகளை திருமணம் செய்து கொண்டனர். துவக்கத்தில் இரு ஜோடிகளும் ஒரே அறையில் வசித்து வந்துள்ளனர். பின்னர் சபினா தனது கணவருடன் வேறு வீட்டிற்கு சென்றுவிட்டார்.
கொலை
சிரியாவில் இருந்து தப்பியோட சம்ரா முயற்சி செய்துள்ளார். அப்போது அவரை பிடித்த தீவிரவாதிகள் அவரை அடித்தே கொலை செய்துள்ளனர். இந்த செய்தி ஆஸ்திரியாவைச் சேர்ந்த பல செய்தித்தாள்களில் வெளியாகியுள்ளது.
ஐ.நா.
ஆஸ்திரியாவில் இருந்து சிரியா சென்ற 2 சிறுமிகளில் ஒருவர் பலியாகிவிட்டதாக ஐ.நா. அதிகாரி ஒருவர் இந்த ஆண்டின் துவக்கத்தில் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
போஸ்டர் சிறுமிகள்
ஐஎஸ்ஐஎஸ் அமைப்புக்கு ஆட்களை சேர்க்கும் வகையில் வெளியான போஸ்டர்களில் சம்ராவும், சபினாவும் கையில் துப்பாக்கியுடன் தீவிரவாதிகளுடன் போஸ் கொடுத்திருந்தனர். சிரியாவில் தான் மகிழ்ச்சியாக இருப்பதாக சபினா தெரிவித்துள்ளார்.