18 இந்திய மீனவர்களை கைது செய்த பாகிஸ்தான்: 3 படகுகள் பறிமுதல்
கராச்சி: பாகிஸ்தான் கடல் பகுதிக்குள் அத்துமீறி நுழைந்ததாகக் கூறி 18 இந்திய மீனவர்களை பாகிஸ்தான் அதிகாரிகள் கைது செய்துள்ளனர். மேலும் இந்திய மீனவர்களின் 3 படகுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
பாகிஸ்தான் கடல் பகுதிக்குள் அத்துமீறி நுழைந்து மீன் பிடித்ததாகக் கூறி 18 இந்திய மீனவர்களை பாகிஸ்தான் கடலோர பாதுகாப்பு படையினர் ஞாயிற்றிக்கிழமை இரவு கைது செய்துள்ளனர். மேலும் இந்திய மீனவர்களின் 3 படகுகளையும் பறிமுதல் செய்துள்ளனர். ஆனால் இந்த கைது குறித்து பாகிஸ்தான் கடலோர பாதுகாப்பு படையினர் எந்தவித அறிவிப்பும் வெளியிடவில்லை.
வழக்கமாக அத்துமீறியதாகக் கூறி இந்திய மீனவர்களை பாகிஸ்தானும், பாகிஸ்தான் மீனவர்களை இந்தியாவும் கைது செய்து வருகின்றன. நல்லெண்ண அடிப்படையில் கைது செய்யப்பட்ட மீனவர்களை இருநாடுகளும் அவ்வப்போது விடுவித்து வருகின்றன.
இந்தியா, பாகிஸ்தான் இடையேயான கடல் எல்லை சரியாக வரையறுக்கப்படாததாலும், மீன்பிடி படகுகளில் தொழில்நுட்பம் இல்லாததாலும் மீனவர்கள் அடிக்கடி எல்லை
தாண்டி சென்று சிக்கிக் கொள்கிறார்கள்.
கடந்த பிப்ரவரி மாதம் பிரதமர் மோடி பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீபுக்கு போன் செய்து வெளியுறவுத் துறை செயலாளர் ஜெய்சங்கர் அவர்களின் நாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளது குறித்து அறிவித்தார். இதையடுத்து அந்நாட்டு சிறையில் இருந்த 171 இந்திய மீனவர்கள் விடுதலை செய்யப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.