மியான்மரில் களேபரத்தில் முடிந்த மக்கள் போராட்டம்.. ராணுவம் துப்பாக்கிச்சூடு... 18 உயிரிழப்பு
நாய்பிடாவ்: மியான்மரில் ராணுவ ஆட்சிக்கு எதிராக இன்று போராட்டம் நடத்தியவர்கள் மீது பாதுகாப்புப் படையினர் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் 18 பேர் உயிரிழந்தனர்.
கடந்த பிப்ரவரி முதல் வாரத்தில் மியான்மர் நாட்டில் ராணுவ புரட்சி ஏற்பட்டது. மியான்மரில் இருந்த மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு அந்நாட்டு ராணுவத்தால் கவிழ்க்கப்பட்டது. அந்நாட்டின் அரசியல் ஆலோசகர் ஆங் சான் சூகி, அதிபர் உள்ளிட்ட பல முக்கிய தலைவர்களும் கைது செய்யப்பட்டனர்.
ராணுவ ஆட்சி கவிழ்ப்பைக் கண்டித்து மியானமரில் மக்கள் போராட்டம் வெடித்துள்ளது. போராட்டத்தை ஒடுக்க அந்நாட்டு ராணுவம் பல்வேறு நடவடிக்கைகளைத் தொடர்ந்து எடுத்து வருகிறது. இருப்பினும், மக்கள் போராட்டம் தொடர்ந்தே வருகிறது.
மக்கள் போராட்டம்
மியான்மர் நாட்டிலுள்ள மிகப் பெரிய நகரமான யாங்கோன் நகரில் இன்று பொதுமக்கள் போராட்டம் நடத்தினர். போராட்டத்தைக் கட்டுப்படுத்த அங்கு அதிகளவில் பாதுகாப்புப் படையினர் குவிக்கப்பட்டிருந்தனர். முதலில் போராட்டக்காரர்களைக் கலைக்க அவர்களை நோக்கி கண்ணீர் புகைக் குண்டுகளை போலீசார் வீசியுள்ளனர்.
திடீர் துப்பாக்கிச் சூடு
அதன் பின்னர் திடீரென்று யாரும் எதிர்பாராத வகையில், பாதுகாப்புப் படையினரும் போலீசாரும் போராட்டக்காரர்களை நோக்கி துப்பாக்கி சுடு நடத்தியுள்ளனர். இந்தத் துப்பாக்கிச் சூட்டில் குறைந்தபட்சம் 18 பேர் வரை கொல்லப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதேபோல 30க்கும் மேற்பட்டோர் இதில் காயமடைந்துள்ளனர். இத்தகவலை ஐநா மனித உரிமை ஆணையம் உறுதி செய்துள்ளது.
மனித உரிமைகள் ஆணையம்
இந்தச் சம்பவத்திற்கு கடும் கண்டனத்தைத் தெரிவித்துள்ள மனித உரிமைகள் ஆணையம், அமைதியான முறையில் போராட்டம் நடத்தியவர்கள் மீது மியான்மர் ராணுவம் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளதாகவும் குற்றஞ்சாட்டியுள்ளனர். மியான்மரில் கடந்த சில வாரங்களாகவே மக்கள் போராட்டம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்னரும் போராட்டத்தின்போது நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில் இருவர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.
தேர்தல் முறைகேடு
கடந்தாண்டு மியான்மரில் நடைபெற்ற தேர்தலில் முறைகேடு நடைபெற்றதாலேயே சிலரைக் கைது செய்துள்ள நடவடிக்கை எடுத்துள்ளதாக மியான்மர் ராணுவம் தெரிவித்துள்ளது. மேலும், இதை ஆட்சி கழிப்பு என்று அழைக்கக் கூடாது என்றும் அந்நாட்டு ராணுவம் எச்சரித்துள்ளது. விரைவில் முறையான தேர்தல் நடத்தப்படும் என்றும் அதன் பின்னர் ஆட்சி திருப்பியளிக்கப்படும் என்றும் ராணுவம் கூறியுள்ளது.