கனடா நாடாளுமன்றத் தேர்தலில் வரலாறு காணாத அளவில் வென்ற பஞ்சாபியர்கள்- 18 எம்.பி.க்கள் தேர்வு!
ஒட்டாவா: கனடா நாடளுமன்ற பொதுத் தேர்தலில் வரலாறு காணாத அளவில் 18 பஞ்சாபியர்கள் வெற்றி பெற்று எம்.பிக்களாக தேர்வாகியுள்ளனர்.
கனடா நாடாளுமன்றத்தின் 42-வது பொதுத் தேர்தல் நேற்று முன் தினம் நடைபெற்றது. இத்தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு நேற்று முடிவுகள் அறிவிக்கப்பட்டன.
மொத்தம் உள்ள 338 எம்.பி. இடங்களுக்கு நடைபெற்ற தேர்தலில், லிபரல் கட்சி 181 இடங்களில் வென்று தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சியை கைப்பற்றியுள்ளது.
பெரும்பான்மைக்கும் அதிகமான இடங்களைக் கைப்பற்றிய அக்கட்சியின் தலைவரான ஜஸ்டின் ட்ருடா (43) புதிய பிரதமராக பதவியேற்க உள்ளார். இவர் முன்னாள் பிரதமர் பியரே ட்ருடாவின் மகன் ஆவார். இதன் மூலமாக கனடா வரலாற்றில் மிக நீண்ட காலமாக 10 ஆண்டுகள் பிரதமராக இருந்த ஸ்டீஃபன் ஹார்ப்பரின் ஆட்சி முடிவுக்கு வந்ததுள்ளது.
மேலும், இத்தேர்தலில் 40 க்கும் மேற்பட்ட இந்திய வம்சாவளியினரும் களத்தில் இருந்தனர். இவர்களில் பஞ்சாபியர்களே அதிகம்.
கனடா நாடாளுமன்றத் தேர்தலில் இதுவரை இல்லாத எண்ணிக்கையில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த நவ்தீப் பெயின்ஸ், ஹர்சித் சஜ்ஜன், தீபக் ஓபராய், சுக் தலீவல், சோனியா சித்து, கமல் கேரா, அஞ்சு தில்லான் ரூபி சஹோட்டா உள்ளிட்ட 18 பஞ்சாபியர்கள் எம்.பியாக வென்றுள்ளனர்.
கனடாவில் நான்கு ஆண்டுகளுக்கு முன்பு நடைபெற்றத் தேர்தலில் லிபரல் கட்சி மாபெரும் தோல்வியைச் சந்தித்தது. கனடா மக்கள் தொகையில் 3 சதவீதத்தினர் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது..