கடலில் வீசப்பட்ட 180 பயணிகள்.. 6 பேர் பலி.. சோமாலியா கொள்ளையர்கள் அட்டகாசம்!
துபாய்: ஏமன் கடலில் சென்று கொண்டிருந்த கப்பலில் கொள்ளையடித்த சோமாலியா கடற்கொள்ளையர்கள் 180 பயணிகளைப் பிடித்து கடலில் தள்ளி விட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதில் 6 பேர் உயிரிழந்தனர்.
இந்த பயணிகள் அனைவருமே எத்தியோப்பியா நாட்டைச் சேர்ந்தவர்கள் ஆவர். ஏமன் சென்று கொண்டிருந்தனர். அப்போது சோமாலியா கடற்கொள்ளையர்கள் அந்த கப்பலை மடக்கினர். அதில் ஏறிக் கொள்ளையடிக்க ஆரம்பித்தனர்.
தகவல் கிடைத்து சர்வதேச ரோந்துப் படையினர் அங்கு விரைந்து வந்தனர். அவர்களைப் பார்த்து கோபமடைந்த கடற்கொள்ளையர்கள், கப்பலில் இருந்த 180 பயணிகளையும் கடலில் பிடித்துத் தள்ளி விட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
6 பேர் பலி
இதைத் தொடர்ந்து சர்வதேச படையினர் மீட்புப் பணியில் குதித்தனர். கடலில் தள்ளி விடப்பட்டவர்களில் 6 பேர் உயிரிழந்து விட்டனர். 13 பேரைக் காணவில்லை. மற்றவர்கள் பத்திரமாக மீட்கப்பட்டனர். கடலில் மூழ்கிய சிலர் ஏமன் நாட்டின் ஷப்வா மாகாண கடலோரத்தில் கரை ஏறி தப்பினர்.
உள்நாட்டுக் கலவரம்
ஏமனில் உள்நாட்டுக் கலவரம் தலைவிரித்தாடுவதால் அங்கிருந்து பலரும் தப்பி வருகின்றனர். இவர்களிடம் கொள்ளையடித்து அட்டகாம் செய்கிறார்கள் சோமாலியா கடற்கொள்ளையர்கள்.
50 பேர் பலி
கடந்த புதன்கிழமையன்று இப்படித்தான் ஏமன் நாட்டில் வசித்து வந்த 120க்கும் மேற்பட்ட சோமாலியா மற்றும் எத்தியோப்பியர்கள் வேறு நாட்டுக்குச் செல்ல படகில் வந்தனர். அழர்கள் வந்த படகு கடலில் மூழ்கியதில் 50 பேர் உயிரிழந்தனர். 22 பேரைக் காணவில்லை. இந்த நிலையில் கடற்கொள்ளையர்களால் 6 பேர் உயிரிழந்துள்ளனர்.
இளைஞர்கள்
ஏமனிலிருந்து வெளியேறி வருவோரில் பெரும்பாலானவர்கள் இளைஞர்கள்தான் என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக 18 வயதுக்குட்பட்டவர்கள்தான் அதிக அளவில் வெளியேறி வருகின்றனர்.