இந்தோனேஷியா விமான விபத்து.. இந்திய விமானி உள்பட 189 பேரும் பலி
Recommended Video
ஜகார்த்தா: இந்தோனேஷியாவில் காணாமல் போன விமானம் கடலில் விழுந்து நொறுங்கிய விபத்தில் அதில் பயணம் செய்த 189 பேரும் பலியாகிவிட்டனர்.
லயன்ஏர் என்ற நிறுவனத்துக்கு சொந்தமான ஜேடி 610 என்ற விமானம் ஜகார்த்தாவில் இருந்து பங்க்கால் பினாங் தீவுக்கு நேற்று காலை 6.20 மணிக்கு புறப்பட்டது. இதையடுத்து அந்த விமானத்தின் தொடர்பு காலை 6.33 மணிக்கு துண்டிக்கப்பட்டது.
புறப்பட்ட 13 நிமிடங்களில் அதன் தொடர்பு துண்டிக்கப்பட்டுள்ளது. 200 பேர் பயணம் செய்யக் கூடிய இந்த விமானத்தில் குழந்தைகள் உள்பட 181 பயணிகளும் 8 ஊழியர்களும் என 189 பேர் பயணம் செய்தனர்.
நடு வானில் மாயமான விமானம் குறித்து விமான நிலைய அதிகாரிகள் விசாரணை நடத்தினர். இந்த நிலையில் இந்த விமானம் ஜாவா கடற்பகுதியில் விழுந்து நொறுங்கியது. அந்த கடற்பகுதியில் விமானத்தின் பாகங்கள் கண்டெடுக்கப்பட்டன.
விமானம் விழுந்த பகுதி 30 முதல் 35 மீட்டர் வரை ஆழம் உள்ள பகுதியாகும். இந்த விமானம் கடலில் விழுந்து மூழ்கியதை இந்தோனேஷிய மீட்பு நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர் யூசுப் லத்தீப் உறுதி செய்தார்.
இந்த விமானம் கடலில் விழுவதை நேரில் பார்த்ததாக கடலில் விசைப்படகில் இருந்த ஒருவரும் தெரிவித்தார். விமானம் விழுந்த பகுதியில் பயணிகளின் புத்தகங்கள், செல்போன், பைகள் மற்றும் விமானத்தின் உடைந்த பாகங்கள், இருக்கைகள் சிதறிக் கிடந்தன. அவற்றையும் மீட்புக்குழுவினர் மீட்டனர். இதையடுத்து 189 பேரும் பலியாகிவிட்டதாக அந்நாட்டு அரசு அறிவித்தது.