நியூயார்க் அருகே அடுக்குமாடி குடியிருப்பில் பயங்கர வெடிவிபத்து! 2 பேர் பலி 18 பேர் படுகாயம்
நியூயார்க்: அமெரிக்காவின் நியூயார்க் நகரில் இரண்டு அடுக்குமாடி கட்டங்களில் நிகழ்ந்த பயங்கரமான வெடிப்புச் சம்பவத்தில் இருவர் பலியானதாகவும், 18 பேர் காயமடைந்ததாகவும் முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
நியூயார்க்கின் கிழக்கு ஹார்லெம் பகுதியில் இரண்டு அடுக்குமாடி கட்டங்களில் பயங்கர வெடிப்புச் சத்தத்துடன் தீ ஜுவாலை மேலெழும்பியது.
இதைத் தொடர்ந்து அந்த அடுக்குமாடி கட்டடங்களில் இருந்தவர்கள் உடனடியாக வெளியேறினர். சம்பவ இடத்துக்கு விரைந்த தீயணைப்பு படையினர் மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர்.
இந்தச் சம்பவத்தில் ஒருவர் பலியானதாகவும், 18 பேர் காயமடைந்ததாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ள நிலையில், உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரிக்கக் கூடும் என உள்ளூர் ஊடகச் செய்திகள் கூறுகின்றன.
இந்த வெடிப்புச் சம்பவத்துக்கான காரணம் உடனடியாக தெரியவில்லை. எனினும், சம்பவம் நிகழ்ந்த பகுதியில் கேஸ் வாசனை பரவியதாக உள்ளூர் மக்களை மேற்கோள்காட்டி பிபிசி செய்தி வெளியிட்டுள்ளது.