லாகூர் விமான நிலையத்தில் திடீர் துப்பாக்கிச் சூடு.. 2 பேர் பலி.. மர்ம நபரால் பெரும் பரபரப்பு
லாகூர்: பாகிஸ்தானின் லாகூர் விமான நிலையத்தில் மர்ம நபர் திடீரென துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்டதில் 2 பயணிகள் பலியானார்கள். இந்த சம்பவத்தால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
துப்பாக்கியால் சுட்ட நபரை பாதுகாப்புப் படையினர் மடக்கிப் பிடித்து கொண்டு சென்றனர். அவர் யார், தீவிரவாத அமைப்பைச் சேர்ந்தவரா என்பது குறித்து விசாரணை நடந்து வருகிறது.
லாகூரில் உள்ள அல்லமா இக்பால் சர்வதேச விமான நிலையத்தில் இன்று காலை இந்த தாக்குதல் சம்பவம் நடந்தது. சம்பந்தப்பட்ட நபர் திடீரென பயணிகள் மீது துப்பாக்கியால் சுட்டதில் 2 பேர் சம்பவ இடத்திலேயே பலியானார்கள். உடனடியாக பாதுகாப்புப் படையினர் அந்த இடத்தை சூழ்ந்து கொண்டனர். துப்பாக்கியால் சுட்ட நபர் மடக்கிப் பிடிக்கப்பட்டார்.
துப்பாக்கிச் சூடு நடந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. காத்திருந்த பயணிகள் சிதறி ஓடினர். துப்பாக்கியால் சுட்ட நபர் விமான நிலையத்துக்கு டாக்சியில் வந்துள்ளார். விமான நிலைய லவுஞ்சுக்கு வந்த அவர் வந்த வேகத்தில் துப்பாக்கியை எடுத்து சுட ஆரம்பித்துள்ளார்.
இவர் எப்படி துப்பாக்கியுடன் உள்ளே நுழைய முடிந்தது என்ற சந்தேகம் எழுந்துள்ளது. பாதுகாப்பு குளறுபடிகளே இதற்குக் காரணம் என்று கூறப்படுகிறது.
இந்த சம்பவம் குறித்து போலீஸார் கூறுகையில், முதல் கட்ட விசாரணையில் கிடைத்த தகவலின்படி இது தீவிரவாத தாக்குதல் அல்ல, தனிப்பட்ட தாக்குதலே காரணம் என்று தெரிய வந்துள்ளதாக கூறியுள்ளனர்.