பாரீஸில் தாக்குதல் நடத்திய மேலும் 2 தீவிரவாதிகளின் அடையாளம் கண்டுபிடிப்பு
பாரீஸ்: பாரீஸில் தாக்குதல் நடத்திய மேலும் 2 தற்கொலைப்படை தீவிரவாதிகளின் அடையாளம் தெரிய வந்துள்ளது. அதில் ஒருவருக்கு ஏற்கனவே தீவிரவாத வழக்கில் தொடர்புள்ளது.
பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் கடந்த வெள்ளிக்கிழமை இரவு 6 இடங்களில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதல்களில் 129 பேர் பலியாகினர். அதில் படாகிளான் தியேட்டரில் தாக்குதல் நடத்திய தீவிரவாதி பாரீஸை சேர்ந்த உமர் இஸ்மாயில் முஸ்தபா என்பது தெரிய வந்தது.
இந்நிலையில் தற்கொலைப்படை தாக்குதல்கள் நடத்திய மேலும் 2 தீவிரவாதிகளின் அடையாளம் தெரிய வந்துள்ளது. அவர்களில் ஒருவர் சிரியாவைச் சேர்ந்த அகமது அல் முகமது மற்றொருவர் பாரீஸை சேர்ந்த சாமி அமீமோர்.
படாகிளான் தியேட்டரில் தாக்குதல் நடத்திய அமீமோர் 1987ம் ஆண்டு அக்டோபர் மாதம் 15ம் தேதி பாரீஸின் புறநகர் பகுதியான டிரான்சியில் பிறந்தவர். அவருக்கு ஏற்கனவே தீவிரவாத வழக்கில் தொடர்பு இருந்துள்ளது. அவரது குடும்பத்தார் 3 பேரை போலீசார் இன்று தங்கள் காவலில் எடுத்து விசாரித்து வருகின்றனர்.
அகமது அல் முகமது உடலின் அருகே சிரியா பாஸ்போர்ட் கிடந்தது. விசாரணையில் முகமது சிரியாவில் இருந்து அகதிகளோடு அகதியாக கடந்த அக்டோபர் மாதம் கிரீஸ் வந்தது தெரிய வந்துள்ளது.