சிரியாவில் தரையில் விழுந்து நொறுங்கிய ஹெலிகாப்டர்: 2 ரஷ்ய ராணுவ விமானிகள் பலி
ராக்கா: சிரியாவில் உள்ள ஹோம்ஸ் நகர் அருகே ரஷ்ய ஹெலிகாப்டர் ஒன்று விபத்துக்குள்ளானதில் அதில் இருந்த ரஷ்ய ராணுவ விமானிகள் இரண்டு பேர் பலியாகினர்.
சிரியா அதிபர் பஷார் அல் ஆசாத் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகளை எதிர்த்து போராட உதவி செய்யுமாறு ரஷ்ய அதிபர் புதினை கேட்டுக் கொண்டார். இதற்காக அவர் ரஷ்யா சென்று புதினை சந்தித்து பேசினார்.
இதையடுத்து புதின் ரஷ்ய ராணுவத்தை சிரியாவுக்கு அனுப்பி வைத்தார். ரஷ்ய ராணுவத்தினர் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகளின் முகாம்களை குறி வைத்து தாக்கி வருகின்றனர். இந்நிலையில் இன்று காலை ஹோம்ஸ் நகர் அருகே ரஷ்ய ராணுவ ஹெலிகாப்டர் ஒன்று விபத்துக்குள்ளாகி தரையில் விழுந்து நொறுங்கியது.
இந்த விபத்தில் ஹெலிகாப்டரில் இருந்த ரஷ்ய ராணுவத்தை சேர்ந்த 2 விமானிகள் பலியாகினர். அவர்களின் உடல்கள் மீமிம் விமானப்படை தளத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. விமானத்தை யாரும் தாக்கவில்லை அது விபத்துக்குள்ளானது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிரியாவில் போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்ட பிறகு ரஷ்யா தனது படைகளில் பெரும் பகுதியை கடந்த பிப்ரவரி மாதம் வாபஸ் பெற்றது. இருப்பினும் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகளுக்கு எதிராக தொடர்ந்து தாக்குதல்கள் நடத்தப்படும் என்று மார்ச் மாதம் ரஷ்யா அறிவித்தது என்பது குறிப்பிடத்தக்கது.