அமெரிக்காவில் எதிர்பாராவிதமாக தாயை சுட்டுக் கொன்ற 2 வயது குழந்தை
ஹேடன்: அமெரிக்காவில் 29 வயது பெண் தனது 2 வயது மகனால் எதிர்பாராவிதமாக சுட்டுக் கொலை செய்யப்பட்டார்.
அமெரிக்காவின் ஐடஹோ மாநிலத்தில் உள்ள பிளாக்புட் பகுதியைச் சேர்ந்தவர் வெரோனிகா ரட்லஜ்(29). அவர் தனது குடும்பத்தாருடன் ஹேடன் பகுதியில் வசிக்கும் உறவினர்களின் வீட்டுக்கு வந்தார். இந்நிலையில் செவ்வாய்க்கிழமை காலை 10 மணிக்கு அவர் தனது 2 வயது மகன் உள்பட 4 குழந்தைகளுடன் அப்பகுதியில் உள்ள வால்மார்ட் கடைக்கு சென்றார்.
கடையில் அவர் 2 வயது குழந்தையை பொருட்கள் வைக்கும் ட்ராலியில் அமரவைத்து அதில் தனது கைப்பையையும் வைத்துள்ளார். அப்போது குழந்தை வெரோனிகாவின் கைப்பையை எடுத்து திறந்தது. கைப்பையில் வெரோனிகா வைத்திருந்த சிறிய துப்பாக்கியை கையில் எடுத்த குழந்தை தனது தாயை நோக்கி சுட்டது. இதில் குண்டு பாய்ந்த வெரோனிகா சம்பவ இடத்திலேயே பலியானார்.
இது குறித்து தகவல் அறிந்த அவரின் கணவர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தார். இதற்கிடையே போலீசாரும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து வெரோனிகாவின் உடலை கைப்பற்றினர். மேலும் குழந்தைகளை உறவினர்களின் வீட்டுக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த சம்பவத்தை அடுத்து வால்மார்ட் கடை நாள் முழுவதும் மூடப்பட்டது. வெரோனிகா வைத்திருந்தது உரிமம் பெற்ற துப்பாக்கியாகும் என்பது குறிப்பிடத்தக்கது.