ஹஜ் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த இந்தியர்களின் எண்ணிக்கை 20 ஆக உயர்வு
மினா: மெக்காவின் மினா நகரில் ஹஜ் நெரிசலில் சிக்கி உயிரிழந்த இந்தியர்களின் எண்ணிக்கை 20 ஆக அதிகரித்துள்ளது.
செளதி அரேபியாவில் உள்ள மெக்கா நகருக்கு உலகம் முழுவதிலும் இருந்து சுமார் 20 லட்சம் பேர் ஹஜ் புனித பயணம் சென்று உள்ளனர். இந்தியாவில் இருந்து 1.5 லட்சம் பேர் புனித பயணம் சென்றுள்ளனர். கடந்த 11-ந் தேதி மெக்காவில் உள்ள பெரிய மசூதியில் ராட்சத கிரேன் சரிந்து யாத்ரீகர்கள் மீது விழுந்ததில் 109 பேர் பலியானார்கள். அதில் 11 பேர் இந்தியர்கள் ஆவர்.
நேற்று முன்தினம் மீண்டும் மிகப்பெரிய சோக சம்பவம் நடந்தது. மெக்காவில் இருந்து 5 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள மினா நகரில் சாத்தான் தூண் மீது கல் எறியும் நிகழ்ச்சி நடைபெற்றுக்கொண்டிருந்தபோது திடீரென நெரிசல் ஏற்பட்டது.
204 ஆவது தெரு ஜமாரட் பாலம் நுழைவு பகுதியில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கியவர்கள் ஒருவர் மீது ஒருவர் விழுந்தனர். இதில் கால்களில் மிதிபட்டு 719 பேர் உயிர் இழந்தனர். 863 பேர் படுகாயம் அடைந்தனர்.
இந்த விபத்து கடந்த 25 ஆண்டுகளில் நடந்த மிகப்பெரிய சோகமாகும். இந்த விபத்தில் பலியான இந்தியர்களின் எண்ணிக்கை 20 ஆக உயர்ந்துள்ளது. இவர்களில் 4 பேர் தமிழர்கள். குஜராத்தைச் சேர்ந்த 9 பேரும் இந்த நெரிசலில் சிக்கி உயிரிழந்துள்ளனர். கேரளாவைச் சேர்ந்த 13 பேரின் கதி என்ன என்று தெரியவில்லை. அவர்களைத் தேடும் பணி தொடருகிறது.