ஏமன் தாக்குதலில் இறந்ததாக கூறப்பட்டவர்களில் 13 இந்தியர்கள் பத்திரம்... 7 பேரைக் காணவில்லை!
டெல்லி: ஏமனில் சவுதி கூட்டுப்படை நடத்திய விமான தாக்குதலில் பலியானதாக கூறப்பட்ட 20 இந்தியர்களில் 13 பேர் உயிருடன் இருப்பதாகவும், 7 பேரை மட்டும் காணவில்லை என்றும் மத்திய வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
ஏமன் நாட்டில், ஈரான் ஆதரவு பெற்ற ‘கவுதிஸ்' கிளர்ச்சியாளர்கள், அதிபர் அப்த் ரப்பு மன்சூர் ஹதிக்கு எதிராக கடந்த ஆண்டு போரில் ஈடுபட்டனர். தலைநகர் சனா உள்பட பல பகுதிகளை அவர்கள் கைப்பற்றியதைத் டொடர்ந்து, ரியாத் நகருக்கு அதிபர் தப்பிச்சென்றார்.
அதனைத் தொடர்ந்து ஏமன் நாட்டை கிளர்ச்சியாளர்களிடம் இருந்து மீட்பதற்காக சவுதி அரேபியா தலைமையில் வளைகுடா நாடுகள் அடங்கிய கூட்டுப்படை அரசுக்கு ஆதராவாக போரில் இறங்கியது. கிளர்ச்சியாளர்களுடன் சண்டையிட்டு, பல நகரங்களை ஒவ்வொன்றாக இந்தக் கூட்டுப்படை மீட்டு வருகிறது.
இந்நிலையில், ஏமன் நாட்டின் ஹொடிடா துறைமுகத்தில் எண்ணெய் கடத்தல்காரர்கள் மீது நேற்று சவுதி கூட்டுப்படை தாக்குதல் நடத்தியது. இதில் அப்பாவி இந்தியர்கள் 20 பேர் பலியானதாக தகவல்கள் வெளியானது.
கடத்தல்காரர்கள், இரண்டு படகுகளில் வந்து எண்ணெயை கொள்ளையடிக்கும் முயற்சியில் ஈடுபட்டதாகவும், அதனை முறியடிப்பதற்காக சவுதி கூட்டுப்படை விமானங்கள் குண்டு வீசித் தாக்குதல் நடத்தியதாகவும் கூறப்பட்டது.
ஆனால், இந்தத் தாக்குதலில் கொல்லப்பட்டதாக கூறப்பட்ட 20 இந்தியர்களில் 13 பேர் உயிருடன் உள்ளதாகவும், மீதமுள்ள 7 பேரை மட்டும் காணவில்லை என்றும் வெளியுறவு அமைச்சக செய்தித்தொடர்பாளர் விகாஸ் ஸ்வருப் விளக்கம் அளித்துள்ளார்.
தலைநகர் திஜிபோதியில் உள்ள இந்தியத் தூதரக அதிகாரிகளுடன் மத்திய அரசு தொடர்ந்து தொடர்பில் இருந்து வருவதாகவும் ஸ்வரூப் தெரிவித்துள்ளார். 20 இந்தியர்களும் எந்த மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் என்ற விவரமும் இதுவரை தெரியவில்லை.